தாம்பரம், ஆவடி காவல் ரோந்து பணிக்கு வாகனங்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

 


    சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து  காவல்துறையின் ரோந்துப் பணிக்கு 106 வாகனங்களை வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


தலைமைச் செயலகத்தில், காவல்துறையின் ரோந்துப் பணிக்கு கூடுதல் உபகரணங்களுடன் 9 கோடியே 76 இலட்சத்து 67 ஆயிரத்து 340 ரூபாய் மதிப்பீட்டிலான 106 மகிந்திரா பொலிரோ நியோ வாகனங்களை வழங்கிடும் விதமாக, முதற்கட்டமாக ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2022) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



 காவல் ரோந்து வாகனத்தில் சிறப்பு அம்சங்கள் பொது அறிவிப்பு செய்யும் ஒலிபெருக்கி மற்றும் ரோந்து வாகனத்தை தொலைவில் இருந்து அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் மூன்று வண்ண விளக்குகள்  பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இவ்வாகனங்களில் GPS கருவி பொருத்தப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட காவல் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து இந்த வாகனத்தின் நகர்வினை அறியவும், அவசர உதவி தேவைப்படும் இடங்களுக்கு செல்லவும் அருகில் உள்ள ரோந்து வாகனத்திற்கு காவல் கட்டுப்பாட்டறையில் இருந்து கட்டளையினை அளிக்கவும் முடியும். இதன்மூலம் பொதுமக்களிடம் இருந்து கட்டுப்பாட்டறைக்கு வரும் அவசர உதவி அழைப்புகளுக்கு குறைந்தபட்ச கால அவகாசத்தில் சம்பவ நிகழ்விடங்களுக்கு செல்ல முடியும்.


 இந்த நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர்  க.பொன்முடி, தலைமைச் செயலாளர்  வெ.இறையன்பு, இ.ஆ.ப., உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர்  செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., பொதுத்துறை செயலாளர்  டி. ஜகந்நாதன், இ.ஆ.ப., தாம்பரம் காவல் ஆணையர்  மு.ரவி, இ.கா.ப., ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், இ.கா.ப., ஆகியோர் உடனிருந்தனர்.


நிருபர் பாஸ்கர்


🙏 தடுப்பூசி முக கவசம் கட்டாயம்🙏