நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம்

 


      வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது.


நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாததால், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய முடியவில்லை. இதனையடுத்து, அந்த காருக்கு வரி செலுத்த நடிகர் விஜய்க்கு வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.


 நடிகர் விஜய் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனுவில் வரி விதிப்பிற்கு தடை கோரியிருந்தார். மேலும், சொகுசு காரை பதிவு செய்யாததால், அதனை பயன்படுத்த முடியவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.


இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரரின் வழக்கறிஞரிடம், மனுதாரர் செய்ய வேலை செய்கிறார் என கேட்டார். அதற்கு வழக்கறிஞர், அவர் நடிகராக இருக்கிறார் என பதிலளித்தார். புகழ் பெற்ற சினிமா நடிகர்கள், முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும். வரி வருவாய் தான் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. வரி என்பது கட்டாயமாக வழங்க வேண்டிய கட்டாய பங்களிப்பு தானே தவிர தானாக வழங்க கூடிய நன்கொடை இல்லை. பொதுமக்கள் செலுத்தகூடிய வரி வருவாய் தான், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. என நீதிபதி அறிவுறுத்தினார்.




மனுதாரர் நுழைவு வரி செலுத்தாததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி தனது திரைப்படங்களைப் பார்க்கும் அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை நடிகர் மதிக்க வேண்டும்.

 

பணக்காரர், வசதி படைத்தவர்கள் மற்றும் புகழ்பெற்ற நபர்கள் வரி செலுத்தத் தவறிவிடுகின்றனர், என்று நீதிபதி கூறினார்.


தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான நாயகர்களாக இருக்க வேண்டுமே தவிர, போலி நாயகர்களாக இருக்க கூடாது

 

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் திரைப்படங்கள் சமூகத்தில் ஊழல் நடவடிக்கைகளுக்கு எதிரானவை. வரி ஏய்ப்பு என்பது ஒரு தேசிய விரோத பழக்கம், . எனவே இறக்குமதி செய்யப்பட்ட காருக்கான வரியை இரண்டு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.


மேலும், நடிகர் விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்தார். இந்த அபதாரத் தொகையை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். இறக்குமதி வரி என்பது காரின் விலையில் 20% ஆகும்.