அறிந்து கொள்வோம் தினம் ஒரு திருதலம்

 



   தினம் ஒரு திருத்தலம்...


 லிங்கத்திற்கு கீழே புதைந்த கோயில்... தென் காளஹஸ்தி...!!



அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்...!!



அமைவிடம் :


அகத்திய மாமுனிவர் அனுப்பிய ஒன்பது தாமரை மலர்களில் எட்டாவது மலர் தங்கிய இடம் ராஜபதி.


 அகத்தியரின் ஆணைப்படி உரோமச முனிவர் இத்தலத்திலும் சிவவழிபாடு செய்து பலன் பெற்றார். 


நவகைலாய திருக்கோயில்களில் ஒன்றான இத்திருத்தலம் நவகிரகங்களில் ஒன்றான கேதுவின் பரிகாரத்தலமாகும்.


மாவட்டம் :


அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம்.


எப்படி செல்வது?


திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் உள்ள குரும்பூரில் இருந்து ஏரல் செல்லும் பாதையில் ராஜபதி உள்ளது. இங்கு செல்ல டாக்ஸி வசதிகள் உள்ளது.


கோயில் சிறப்பு :


தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படாத கண்ணப்ப நாயனாருக்கு என தனிச் சந்நதி உள்ளது. இச்சிலையின் உயரம் 4½ அடி. மிருகசீரிஷ நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடந்து வருகின்றன.


பொதுவாக சிவன் கோயில்களில் நவகிரக சந்நதி தான் இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு நவலிங்க சந்நதி அமைந்துள்ளது. காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இதை தென் காளஹஸ்தி எனக் கூறப்படுகிறது.


இத்தலத்தில் வீற்றிருக்கும் கைலாசநாதர் சிலையின் லிங்கத்தில் நான்கு புறங்களிலும் நான்கு சக்கரவடிவங்கள் உள்ளன. இந்த லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். 


நவ கைலாயத்தில் இது கேது வணங்கிய ஸ்தலம். ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களும், கேதுவின் ஆதிக்கத்தில் உள்ளவர்களும், கேது ஸ்தலமான, காளஹஸ்திக்கு நிகரான இராஜபதியில் வழிபடுவது சிறப்பு.


கோயில் திருவிழா :


திருவாதிரை, சிவராத்திரி, மாதப்பிறப்பு, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, கிருத்திகை, சஷ்டி, கார்த்திகை போன்ற நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன. சோமவாரமன்று 108 சங்காபிஷேகமும், ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. அம்பாள் சந்நதியில் நவராத்திரி கொலுவும், மகாசிவராத்திரியன்று இரவு முழுவதும் பூஜை, உட்பிரகார உலாவும் கோலாகலமாக நடைபெறுகின்றன.


வேண்டுதல் :


விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் ஆரோக்கியத்துடன் சிறந்த வருமானத்தை தரவும் கைலாசநாதரிடம் வேண்டிக் கொள்ளலாம். 


ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.


நேர்த்திக்கடன் :


சிவனுக்கு பலவர்ண ஆடை சாற்றி, கொள்ளு நைவேத்தியம் படைத்து வழிபடலாம். சுவாமி, அம்பாளுக்கு விளைபொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கால்நடைகள் நோய் நொடியின்றி இருக்க நந்திகேசுவரருக்கு பிரதோஷத்தன்று திரவிய பொருட்கள் மற்றும் பழங்கள் காணிக்கையாக செலுத்துகின்றனர்.


திருச்சிற்றம்பலம் 


 பக்தியுடன் மோகனா செல்வராஜ்