நாயன்மார்கள் : அதிபக்தர் - 3
வில்வ இலை தூவி இன்னும் பல ஆகம முறைகளில் வழிபட வேண்டிய சிவனை மீனை கடலில் விட்டு வழிபடுவது அவரை அவமானபடுத்துவதற்கு சமம் , அபச்சாரம் என்ற குரல்கள் அவர் காதில் விழுந்தாலும் என்னிடம் இருப்பதில் உயர்ந்ததைக் கொடுப்பேன் என அவர்போக்கில் இருந்தார்.
அனுதினமும் காணிக்கையாய் சிறந்த மீனை கொடுத்தாரே தவிர சிவனிடம் அவர் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை.
பிரதிபலன் பார்ப்பது உண்மையான பக்தி ஆகாது , அது வியாபாரம்.
உலகாளும் சிவனுக்கு இவரைத் தெரியாதா.. அனுதினமும் இவர் பக்தியாய் கடலில் சமர்ப்பிக்கும் மீனை ஏற்றுக்கொண்டே வந்தார்.
ஒரு பாமரன் அதுவும் பரதவன், கடலும் படகும் தவிர ஏதும் அறியாத அவன் காட்டும் அன்பில் நெகிழ்ந்தார் .
ஆனால் ஒரு சாஸ்திரமும் , வேதமும் அறியா பாமரன் ஒருவன், மிகப்பெரும் சக்தியினை மனதால் உணர்ந்து, அதில் பக்தி கொண்டு, அனுதினமும் அந்த பரம்பொருளுக்கு காணிக்கை சமர்ப்பிப்பது அவரை உருக்கியது.
எல்லாம்வல்ல பரம்பொருள் தூய்மையான அன்போடு தன்னை வணங்கும் மனிதனை நோக்கி அன்போடு ஓடிவரும், அவனை மனதால் கொண்டாடும். அவன் அருகேதான் நிற்கும். அவன் மனதை கண்டு மகிழும்.
மனிதனால் தான் அதை உணரமுடியாதே தவிர, மனதால் தேடி உயிரால் குரல் கொடுத்தால் சிவம் ஓடிவரும்.
அதிபத்தரின் உன்னத பக்தியில் உருகிய சிவன், அவரின் மாபெரும் பக்தியினை உலகுக்கு உணர்த்த சித்தம் கொண்டார்.
அதற்காக இதோ பக்தன் என சொல்லிவிட முடியாது, அவனின் பக்தி நிரூபிக்கப்பட வேண்டும், மகா இக்கட்டான நேரத்திலும் அவனின் பக்தி நிலையாய் நிற்க வேண்டும், எந்நிலையிலும் அவன் அன்பு மாறவில்லை என்பது தெரிய வேண்டும்.
யாருக்கு தெரியவேண்டும் ?சிவனுக்கா? இல்லை. உலகத்தாருக்கு .
ஆம், மிக மிக இக்கட்டான சோதனை வைக்கப்பட்டது. சிவன்மேல் அதிபத்தர் கொண்ட அன்பினை உலகுக்கு நிரூபிக்கும் சோதனை அது.
அன்று ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாள், ஏதோ விழாவுக்காக கடற்கரை களை கட்டியிருந்தது, அதில் ஆர்வமின்றி வழக்கம் போல் மீன்பிடிக்க கிளம்பினார் அதிபத்தர். அவருக்காக அல்ல , மாறாக ஒரு மீன் கிடைக்கும் அதை சிவனுக்கு கடலில் அர்ப்பணிக்கலாம் எனும் அதே பக்தியோடு படகேறினார்.
அதைத் தவிர என்ன தெரியும் அவருக்கு?
அன்று வழக்கம் போல ஒரு மீனுக்கு வலைவிரித்து அதிபத்தர் காத்திருக்க நெடுநேரம் ஒன்றும் சிக்கவில்லை, எந்நாளும் கிடைத்த ஒரு மீன் கூடவா இன்று சிவனுக்காக சிக்கவில்லை என வருந்திய அதிபத்தர் நெடுநேரம் காத்திருந்தார்.
நெடுநேரம் கழித்து ஒரே ஒரு மீன் சிக்கியது , ஆனால் அது மகா மகா அபூர்வ மீன்.
தொடரும்
பக்தியுடன் மோகனா செல்வராஜ்