"நடமாடும் மருத்துவ சேவை" திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர்

 


    மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் மருத்துவம் சார்பில் 70 கோடி ரூபாய் செலவில் புதிதாக 389 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை  , 133 நடமாடும் மருத்துவமனைகளின் சேவையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (08-04-22)அன்று  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


சிறந்த தாய் சேய் நலன், காசநோய்க்கான சிகிச்சை, தொற்றா நோய்களுக்கான சிகிச்சை ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும், கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் வரையறுக்கப்பட்ட பயணத்திட்டத்தின்படி மருத்துவ சேவை அளிப்பதே நடமாடும் மருத்துவமனை திட்டத்தின் நோக்கமாகும்.


இத்திட்டத்தின் கீழ், ஒரு மாதத்திற்கு ஒரு வட்டாரத்தில் 40 முகாம்கள் நடத்தப்பட்டு வருவதோடு, அதிக தற்காலிக குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய், காசநோய் உள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்கான மருந்துகளும் வழங்கப்படுகிறது.



மேலும் 2021-2022ஆம் ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கையில், "தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ சேவையை வலுப்படுத்த புதிதாக 389 எண்ணிக்கையில் நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் ரூபாய் 70 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் ஒரு வாகனத்திற்கு தலா ரூ.18 இலட்சம் செலவில் தமிழகத்தில் உள்ள 389 நடமாடும் மருத்துவ வாகனத்தை மாற்றுவதற்கு 70.02 கோடி ரூபாய் நிதி தேசிய நலவாழ்வு குழுமத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மூலம் புதிதாக வாங்கப்பட்ட 389 வாகனங்கள் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதன் சேவையை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.


இந்த திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



திருமதி மோகனா செல்வராஜ்