ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022-2023 - பாகம் 03
ராகு கேது பெயர்ச்சி 2022-2023...!!
கலகலப்பும், சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய விகடகவியான மிதுன ராசி அன்பர்களே...!!
ராகு கேது பெயர்ச்சியால் (2022-2023) இனி வர இருக்கின்ற ஒன்றரை ஆண்டு காலம் போக சுகத்திற்கு அதிபதியாக இருக்கக்கூடிய ராகு பகவான் மிதுன ராசிக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்திலும், ஞானத்தை அளிக்கக்கூடிய கேது பகவான் மிதுன ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்கள்.
செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அரசு சார்ந்த பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும்.
பொருளாதாரம் :
தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் வீண் விரயங்களை குறைத்து சேமிப்பை மேம்படுத்த இயலும்.
உடல் மற்றும் ஆரோக்கியம் :
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்பட்டு நீங்கும். புதிய வகை உணவு சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும்.
பெண்களுக்கு :
தம்பதியர்களுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விடாப்பிடியான சில முயற்சிகளுக்கு பின்பு எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும்.
மாணவர்களுக்கு :
வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்புகள் சாதகமாக அமையும். வித்தியாசமான யுக்திகளை பயன்படுத்தி போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு :
பணியில் எதிர்பார்த்த உயர்வு காலதாமதத்திற்கு பின்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பும், பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாபாரிகளுக்கு :
வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற முன்னேற்றம் கிடைக்கப் பெறுவீர்கள். கூட்டாளிகளிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.
அரசியல்வாதிகளுக்கு :
கட்சி நிமிர்த்தமான பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களிடத்தில் காணப்பட்ட குறைகளை நிறைகளாக மாற்றிக் கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும்.
கலைஞர்களுக்கு :
கலை சார்ந்த துறையில் எதிர்பாராத புதிய வாய்ப்புகள் உண்டாகும். பிற மொழி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும்.
நன்மைகள் :
நடக்க இருக்கின்ற ராகு கேது பெயர்ச்சியின் மூலம் எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளும், செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதற்கான சூழ்நிலைகளும் உண்டாகும்.
கவனம் :
பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சலும், குழந்தைகளிடத்தில் பொறுமையை கையாள வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்வது நல்லது.
வழிபாடு :
தினந்தோறும் ராகு கேதுக்களுடன் இருக்கக்கூடிய விநாயகரை வழிபாடு செய்வதன் மூலம் சிந்தனைகளின் போக்கில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.
திருமதி மோகனா செல்வராஜ்