அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

 


         அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 41 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு.


திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை தாக்கியதாக கொடுத்த புகாரில் வழக்குப்பதிவு.


ஜெயக்குமார் கார் ஓட்டுநர் அளித்த



புகாரில் 10 திமுகவினர் மீதும் வழக்குப்பதிவு.



நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின் போது, வண்ணாரப்பேட்டை 49 ஆவது வார்டில் வாக்களிக்கச் சென்ற ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அ.தி.மு.க.வினர் தாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதன் தொடர்ச்சியாக, சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இன்று மாலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும், அவரை எழும்பூர் நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு நேரில் அழைத்து சென்று ஆஜர்ப்படுத்த காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தனது தந்தையை காவல்துறையினர் 25 பேர் வீடு புகுந்து இழுத்துச் சென்றதாக ஜெயக்குமாரின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்தன் புகார் கூறியுள்ளார்.


நிருபர் பாஸ்கர்