சிவசங்கர் பாபா பள்ளியை மூட குழந்தைகள் நல குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரை

 


சுசில் ஹரி பள்ளியை மூட செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமம் தமிழக அரசுக்கு கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்படும் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்ததை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.

ஆனால், சிவசங்கர் பாபா உட்பட 3 பேர் ஆஜராகவில்லை. இதனைத் தொடர்ந்து, சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சிபிசிஐடி தனிப்படை போலீசார் விசாரணைக்காக உத்தரகண்ட் டேராடூன் சென்றபோது தனியார் மருத்துவமனையில் இருந்த சிவசங்கர் பாபா சிபிசிஐடி வருவதை அறிந்து மருத்துவமனையில் தப்பி ஓடினார். 

இன்று காலை  மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய சிவசங்கர் பாபா டெல்லி காசியாபாத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சுசில் ஹரி பள்ளியை மூட செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமம் தமிழக அரசுக்கு கடிதம் மூலம் பரிந்துரை செய்துள்ளது. இதுகுறித்து கடிதத்தில், செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் சுசில் ஹரி உண்டு உறைவிட பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு பாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா உட்பட பள்ளி நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தைகள் நலக்குழுமத்தின் மூலம், பாலியல் புகாருக்குள்ளான சம்மந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ (POCSO) உள்ளிட்ட பல்வேறு சட்ட பிரிவுகளில், சிவசங்கர் பாபா மற்றும் பள்ளி நிருவாகத்தை சார்ந்தவர்கள் மீது வழங்கு பதிவு செய்துள்ளனர். 

வழக்கின் தன்மையைக் கருதி தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. (CB CID) பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு  கல்வியாளர்கள் மற்றும் குழந்தை நல ஆர்வலர்கள் கண்டம் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே இப்பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இச்சம்பவத்தால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். பெற்றோர்கள் தங்களில் பிள்ளைகள் இப்பள்ளியில் படிப்பினை தொடர விருப்பமில்லாமல் மாற்று சான்றிதழை பெற்று வேறு பள்ளியில் ‘சேர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி இப்பள்ளியை விட்டு வெளிவேறும் மாணவர்களுக்கு வேறு பள்ளிகளில் சேர்த்திட கல்வித்துறை உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனவும், இப்பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா குழந்தைகள் நலனுக்கு எதிராக செயல்பட்டு பல்வேறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகவும், பள்ளி நிருவாகம் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாகவும், குற்றச்சாட்டு எழுந்தள்ளதால் பள்ளி கல்வித்துறை உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து இப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக அரசினை மாவட்ட குழந்தைகள் நலக் குழுமத்தின் மூலம் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.




  • TAGS