புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது

 



           புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான 16 இடங்களை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.


புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளிலும், திமுக 6 தொகுதிகளையும் கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆர் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதியிலும் வெற்றி பெற்று பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது.


தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சரும் என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி ஒரு தொகுதியில் (ஏனாம்) தோல்வி அடைந்துள்ளார். 5 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. புதுச்சேரி சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 16 இடங்கள் தேவைப்படும் நிலையில் என்.ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உள்ளது.


மேலும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு முதல்முறையாக ஆறு சுயேட்ச்சை வேட்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.