போகி பண்டிகை


போகி (ஆங்கிலம்: Bhogi தெலுங்கு:భోగి) தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. 

கிரிகோரியன் நாட்காட்டியின்படி வழக்கமாக இப்பண்டிகை சனவரி 13 ஆம் நாளில் கொண்டாடப்படும். 

ஆனால் சில ஆண்டுகளில் சனவரி 14 ஆம் நாளிலும் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். 

பரவலாக போகிப் பண்டிகை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.

பொங்கலின் துவக்கமாக நாம் போகி பண்டிகையை கொண்டாடுகிறோம். போகி என்றாலே “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற தத்துவத்தை நம் முன்னோர்கள் விதைத்து சென்றுள்ளனர். 

வெறும் பழைய பொருட்களை மட்டும் எரிக்காமல் மன ரீதியாக வேறு சிலதையும் போகியன்று எரிப்பதே சிறந்தது. பழங்காலத்தில் போகியன்று விடியற்காலையில் எழுந்து பழைய பாய், வேறு சில உபயோகமற்ற பொருட்கள், உடைந்த பானைகள் போன்றவற்றை வீட்டருகில் தீயிட்டுக் கொளுத்துவது வழக்கம். 

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.[2]

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். 

பல்வேறு தெய்வீகக் குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. 

பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகி அன்று, வைகறையில் 'நிலைப்பொங்கல்' நிகழ்வுறும். வீட்டின் முன்வாயில் நிலைக்குப் மஞ்சள் பூசி, திலகமிட்டு, தோகை விரிந்த கரும்பொன்றைச் சாத்தி நிற்கச் செய்து வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் வைத்து, தேங்காய் உடைத்து, கற்பூரம் காட்டி இல்லுறை தெய்வத்தை வணங்குவர். 

சிறு மணித்துளிகளில் இது முடிவுறும். இதைக் குடும்பத்தலைவி நடத்துவார்.

மேலும் பொங்கல் அன்று புதுப்பானை, புத்தரிசி என பல புதியவைகளோடு தை மாதத்தை பொங்கலிட்டு வரவேற்பது வழக்கம். 

மன ரீதியாக பார்த்தல் போகிக்குள் வேறு சில தத்துவங்களும் ஒளிந்துள்ளன. நம்முடைய மனதில் எக்கச்சக்கமான கவலைகளையும், வெறுப்பு, பொறாமை என பல தீய எண்ணங்களையும் வைத்துக்கொண்டு வாழ்கிறோம். 

இவை அனைத்தையும் நம்முடைய மனதில் இருந்து எரித்துவிட்டு பொங்கல் முதல் புதிய மனிதனாக வாழவேண்டும் என்ற அற்புத தத்துவத்தையும் போகி உணர்த்துகிறது. 

பாழ்பட்ட பொருட்களையும் பாழான மனதையும் போக்கி விட்டு புது மனிதனாய் புத்துணர்வோடு வாழ துவங்குவதே போகி பண்டிகையை கொண்டாடுவதன் நோக்கம். 

இதனாலேயே இதற்கு ‘போக்கி’ என்ற பெயர்வந்தது. நாளடைவில் அந்த பெயரே மருவி போகி என்றானது. 

நாகரிக வளர்ச்சியால் இன்று பலர் போகியை கொண்டாடுவது கிடையாது. கொண்டாடுபவர்களில் சிலர் சுற்று சூழலை மாசு படுத்தும் சில பொருட்களை எரிக்கவே செய்கின்றனர். 

இந்த காலகட்டத்தை பொறுத்தவரை போகி அன்று பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதற்கு பதிலாக வீட்டுக்கொரு மரம் நட்டாலே போதும் பழைய மாசு காற்று குறைந்து அற்புதமான தென்றல் வீச துவங்கும்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

நன்றி 

தொகுப்பு : மோகனா செல்வராஜ்