சென்னை மருத்துவமனையின் மருத்துவர் மர்ம மரணம்

 


சென்னை மருத்துவமனை தலைவர் உமாசங்கரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் இயங்கிவந்த எல்லன் மருத்துவமனையை, மருத்துவமனை தலைவர் ராமச்சந்திரன் சென்னையை சேர்ந்த உமாசங்கர் என்பவருக்கு 10 ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்துக் கொள்ள 2017ம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால் உமாசங்கர் வாடகை தராததால் உமாசங்கர் மீது ராமசந்திரன் கொடுத்த புகாரை தொடர்ந்து உமா சங்கர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். 
தினமும் உமாசங்கர் ரத்தினபுரி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்த நிலையில் நேற்று கண்ணப்ப நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது விபத்தா அல்லது திட்டமிட்ட கொலையா என்ற கோணத்தில் துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று உமாசங்கரின் உறவினர்கள் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று புகார் அளித்தனர்.

ஆனால் இப்போது வரை ராமச்சந்திரன் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை என்று கூறி உமாசங்கரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து கோவை அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ராமச்சந்திரனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் ராமச்சந்திரனை அழைத்து விசாரிக்கும் வரை உடலை வாங்காமல் காத்திருப்போம் என்று தெரிவித்து கோவை அரசு மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.