முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை வருகிற 28-ஆம் தேதி மக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளது என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என்றும் வேதா இல்லத்தில் ஜெயலலிதா படித்த புத்தங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் எனவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
**************************
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு வென்றவர் ஆள் மாறாட்டம் செய்தது வருவாய்த்துறை விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர் கண்ணன் 33 வது எண் கொண்ட பனியனை மாற்றி ஆள் மாறாட்டம் செய்தது உறுதி செய்யப்பட்டது.
**************************
பாம்பனில் விசைப்படகு திடீரென தீப்பிடித்து எரிந்ததால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பன் துறைமுகத்தில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது. கடல் பகுதியிலிருந்து கரும்புகை கிளம்பியதால் மீனவர்கள் படகு எரிவதை கண்டனர். கடற்கரையில் இருந்த மீனவர்கள் படகுகளை எடுத்து கடலுக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
***************************
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த 4 பேரும் ஆரோக்கிய சேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் கடற்கரையில் இருந்து கடந்த 18ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
மீன் பிடித்துக் கொண்டிருந்த இவர்களை இலங்கை கடற்படையினர் கொடூரமாக தாக்கி, தீவைத்து எரித்து கொன்றனர். கருகிய நிலையில் 4 பேரின் உடல்களும் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
இதனால் தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். இதனிடையே 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நீதி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 24.01.2021 முதல் தங்கச்சிமடத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்த மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.