இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் (ஜனவரி 26) நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதை உறுதி செய்தார். இதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதால், இந்தியா உள்பட சுமார் 40 நாடுகள் அந்நாட்டுடான விமான போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளன.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக போரிஸ் ஜான்சன் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனை உறுதி செய்வது போல், இந்திய குடியரசு தின விழாவில் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்று அந்நாட்டு மூத்த மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏற்கனவே கொரோனா பாதித்து அதிலிருந்து குணம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.