வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியா வருமா

 



உலக அளவில் கரோனாவை எதிர்கொள்வதற்கான தடுப்பூசியைக் கொண்டுவருவதில் வளர்ந்த நாடுகள் போட்டி போடுகின்றன. தற்சமயம் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ‘கோவேக்சின்’, ‘ஜைகோவ்-டி’ இரண்டு தடுப்பூசிகளைச் சேர்த்து 11 ‘சோதனைத் தடுப்பூசிகள்’ 3-ம் கட்ட ஆய்வில் உள்ளன. இந்தியத் தடுப்பூசிகளுக்கு 50% பலன் கிடைத்தாலே போதும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க கரோனா தடுப்பூசி 90% பலன் தருவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.




அதைத் தொடர்ந்து ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி 92% பலன் தருவதாக அந்த நாடு அறிவித்தது. இந்த வாரம், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள ‘எம்ஆர்என்ஏ-1273’ (mRNA-1273) தடுப்பூசி 94.5% செயல்திறன் கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.


இந்தச் சூழலில், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குநர் ரந்தீப் குலேரியா, ‘வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகள் இந்தியத் தடுப்பூசிகளைவிடத் தரம் கூடியதென்றால் எந்தத் தடுப்பூசியை எவருக்கு முன்னிலைப்படுத்துவது?’ எனும் முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.


அதேநேரம், கரோனாவுக்கான தடுப்பூசிகளை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்வதிலும் சிரமங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.


மருந்து வணிகம் தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தத்தின்படி ஒரு புதிய தடுப்பூசியைச் சந்தைப்படுத்தும் உரிமை அதைக் கண்டுபிடித்த மருந்து நிறுவனத்துக்கு 20 வருடங்களுக்குச் சொந்தமாகிறது. 




விலக்கு வேண்டும்


கரோனா தடுப்பூசி வணிகத்தில் லாபம் ஈட்டுவது முக்கிய நோக்கமென்றால், இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் வெளிநாட்டுத் தடுப்பூசிகளை வாங்க முடியாத நிலைமை ஏற்படும். ஆகவே, கரோனா தடுப்பூசி நிறுவனங்கள் வணிக நலனைப் பின்னுக்குத் தள்ளி, மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை கொடுக்க முன்வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. 


இதற்கு வழி தேடும் முயற்சிதான் காப்புரிமையில் இந்தியா விலக்கு கேட்பது. அறிவுசார் காப்புரிமை ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபோதே சில விதிவிலக்குகளும் அதில் இணைக்கப்பட்டன. முக்கியமாக, மக்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் மருத்துவச் சூழல் ஏற்படும்போது, அதை எதிர்கொள்ள, காப்புரிமை விதிகள் தளர்த்தப்படலாம் என்கிறது ஒரு விதி.


இப்போது காப்புரிமை பெறுவதற்கு ஆய்வுகளை நடத்திக்கொண்டிருக்கும் தடுப்பூசி நிறுவனங்களைச் சார்ந்த பணக்கார நாடுகளின் ஆதிக்கம் இதில் அதிகம்.


ஆகவே, இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பிடம் வைத்திருக்கும் கோரிக்கை பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது. கடந்த அக்டோபர் 15-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்தக் கோரிக்கையின் மீது எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் முடிந்திருக்கிறது.


எனவே, வெளிநாட்டுத் தடுப்பூசிகள் தரம் மிகுந்ததாக அறிவிக்கப்பட்டால், இந்தியாவுக்கு அவை கிடைப்பது வர்த்தகக் காப்புரிமைக் கழகத்தின் கையில்தான் உள்ளது.




தடுப்பூசி தேசியம்


ஒரு பெருந்தொற்றுக்குப் போதுமான தடுப்பூசி கிடைக்காமல் உலகில் ஒரு பகுதியினர் பாதிப்புக்கு உள்ளானால், அது அந்தக் கிருமிகளை வெகுகாலம் புழக்கத்தில் வைத்திருக்கவே வழிசெய்யும். அதனால், மற்ற நாடுகளும் பொருளாதாரரீதியில் பாதிப்பைச் சந்திக்கும். ஆகவே, இந்த நிலைமை மாற வேண்டும். கரோனா தடுப்பூசிக்கென்றே உலக சுகாதார நிறுவனம் சர்வதேசக் கூட்டமைப்புடன் இணைந்து ‘ஆக்ட்-ஆக்ஸிலெரேட்டர்’ எனும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது, உலகின் அனைத்து நாடுகளுக்கும் சமமாகவும் மலிவு விலையிலும் தடுப்பூசி கிடைக்கச் செய்கிறது. இதற்கு ‘கோவாக்ஸ் வசதி’ என்று பெயர்.




கரோனாவுக்கான வெளிநாட்டுத் தடுப்பூசிகள் இந்தியாவுக்குக் கிடைப்பதில் ‘தடுப்பூசி தேசியம்’ தடையாக இருக்குமானால், ‘கோவாக்ஸ் வசதி’யைப் பெறுவதற்கு ‘ஆக்ட்’ அமைப்புக்கு இந்தியா அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும்.


உலக சுகாதார நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில் இந்தியாவிலிருந்து இருவர் இருக்கும்போது இந்தச் சிரமங்களைச் சுலபமாகக் கடந்துவிடலாம் என்பது நமது நம்பிக்கை.