வங்கி கடன் மோசடி வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இந்தியாவின் வேண்டுகோளின் பேரில் கடந்த 2017-ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டார். உடனே ஜாமீனில் வெளிவந்தார். அவரை நாடு கடத்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதற்கு எதிரான விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்தது. இருப்பினும் அவர் இன்னும் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படவில்லை.
இதுகுறித்து கேட்டபோது இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் (பொறுப்பு) ஜன் தாம்சன் கூறியதாவது:-
சில சட்டப்பிரச்சினைகள் இருப்பதால் அவற்றுக்கு தீர்வு காணப்படாமல் விஜய் மல்லையாவை நாடு கடத்த முடியாது. அது ரகசியமான விவகாரம். அதைப் பற்றி நான் விரிவாக கூற முடியாது.
இதற்கு எவ்வளவு காலம் ஆகும் என்றும் நான் கணிக்க முடியாது. இருப்பினும் கூடிய விரைவில் தீர்வு காண முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.