நீர்வழிப்பாதை தொடர்பாக வழக்கு தோப்பை விற்ற நடிகர் மாதவன்

 



திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் தேக்கம்தோட்டம் பகுதியில், சினிமா நடிகர் மாதவன் 5 ஆண்டுகளுக்கு முன்பு 4.82 ஏக்கர் அளவிலான தோப்பினை  விலைக்கு வாங்கினார்.


அதில் தென்னை மற்றும் மாமரங்கள் இருந்தன. இவரது தோப்பின் வழியாக செல்லும் நீர் வழிப்பாதை தொடர்பாக அப்பகுதி விவசாயிகள், மாதவன் மீது வழக்கு தொடர்ந்தனர்.


இந்நிலையில், நடிகர் மாதவன், பழநியை சேர்ந்த ஜோதீஸ்வரனுருக்கு, தனது தோப்பினை விற்பனை செய்தார்.


இதற்காக பழநி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். உரிய பத்திரப்பதிவு நடத்தப்பட்டது. 


இந்நிலையில், தனது டுவிட்டர் பதிவில், ‘‘இறுதியாக, பழநியில் தென்னை வளர்ப்புத் திட்டம் முடிவடைந்தது. புதிய உள்ளூர் உரிமையாளர்களுக்கு எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


மன திருப்தி தரும் இந்த புனித இடத்திலிருந்து செல்வதில் வருத்தம்தான். பழநியைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி’’ என்று தெரிவித்துள்ளார்.