பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி - அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய அரசு மருத்துவர்கள்



சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பெண் கர்ப்பப்பையிலிருந்து சுமார் 8 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.



 

சிதம்பரத்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர் வயிற்று வலி காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வந்தார். பின்னர் அவருக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது.

 

பெண்ணின் கர்ப்பப்பை அருகிலுள்ள அவரின் வலது சினைப்பையில் பெரிய நீர்க்கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முயன்றார்.

பலனேதும் கிடைக்காத நிலையில், மீண்டும் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

 

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களில் ஒன்றாக இருக்கும் சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது அவரது வயிற்றிலுள்ள கர்ப்பப்பையிலிருந்து சுமார் 8 கிலோ எடை கொண்ட கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

 

இதையடுத்து அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அசோக்பாஸ்கர், அறுவை சிகிச்சை செய்த மருத்துவக் குழுவினரைப் பாராட்டினார். உடல் குணமடைந்த பெண்ணும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



 




First published