தமிழகத்தின் மாதிரிப்பள்ளியாக தேர்வான பஞ்சப்பட்டி அரசுப் பள்ளி

தமிழகத்தின் மாதிரிப்பள்ளியாக தேர்வான பஞ்சப்பட்டி அரசுப் பள்ளி... என்ன சிறப்பு?



தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை, 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான மாதிரிப் பள்ளியாக, குளித்தலை கல்வி மாவட்டத்தில் பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை தேர்வு செய்துள்ளது. இது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய கிராமம் பஞ்சப்பட்டி. இந்தக் கிராமத்தில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.


இந்த அரசு மேல்நிலைப்பள்ளியில், 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். 12 ஏக்கர் நிலப்பரப்பில், இயற்கை சூழலுடன் அமைந்துள்ள இப்பள்ளியில், 3 கிலோவாட் சூரிய மின்சாரம் மூலம் தடையற்ற மின் வசதி, பரந்த விளையாட்டு மைதானம், இணையதள வசதியுடன் கூடிய கணினி வகுப்பறை, ஆங்கிலம், கணினி, அறிவியல் ஆய்வகங்கள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி எனப் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


அதேபோல், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி, மின்னணுவியல் பயிற்சி, அழகுக்கலை பயிற்சி, நூலக வசதி, கழிவறை, குடிநீர் வசதி, பாட இணை செயல்பாடுகளான மொழிப்பாடம், அறிவியல், கணிதம், நுகர்வோர், காவலர், சுற்றுச்சூழல், உடல் நலக்குழு, ரெட் ரிப்பன் கிளப், தொல்லியல் ஆய்வு மன்றங்கள், ஜூனியர் ரெட் கிராஸ், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம், நாட்டு நலப்பணித்திட்டம், சாலைப்பாதுகாப்பு இயக்கம், பேரிடர் மேலாண்மைக் குழு, இளம் விஞ்ஞானிகள் குழு, மேல்நிலை வகுப்பில் சத்துணவியல் பாடப்பிரிவு ஆகிய பல்துறை சிறப்பம்சங்களுடன் கூடிய சிறப்பான கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.


இந்த சிறப்பான செயல்பாடுகளைத் தொடர்ந்துதான், இந்தப் பள்ளி தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் குளித்தலை கல்வி மாவட்ட அளவில் மாதிரிப்பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இதுகுறித்து, பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெய்பீம்ராணியிடம் பேசினோம்.


"2020-21 ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை மூலம் மாதிரிப் பள்ளியாக குளித்தலை கல்வி மாவட்டத்தில் எங்கள் பள்ளியைத் தேர்ந்தெடுத்துள்ளது.


இந்த வெற்றிக்குக் காரணம், எல்லா ஆசிரியர்களும் சேர்ந்து செய்த முயற்சிகள்தான். ஊர்கூடி தேர் இழுப்பதுபோல், அனைவரும் சேர்ந்து கடுமையாக உழைத்து, இந்தச் சாதனையை சாத்தியமாக்கியிருக்கிறோம்.


எங்கள் பள்ளியில் மழலையர் வகுப்பான எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு, ஆங்கில வழி மாணவ, மாணவியர் சேர்க்கை விஜயதசமி (26.10.2020) முதல் நடைபெற்றுவருகிறது.


ஆகையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பஞ்சப்பட்டி, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து, நகப்புறத்திற்கு இணையான கல்வியைப் பெறலாம். கிராமப்புறப் பகுதி அரசுப்பள்ளியில் எல்.கே.ஜி, யு,கே.ஜி ஆங்கில வழி வகுப்புகள் துவங்குவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.


இருந்தாலும், தனியார் பள்ளி மோகத்தில் இருக்கும் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க முன்வரவேண்டும். தனியார் பள்ளிகளைவிட அதிக தரத்தில் கல்வி வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்" என்றார் அக்கறையுடன்.