நவராத்திரி விரதம்


சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.


விரதகாலம்:


நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும்.


இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.


இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது .


ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.


தொன்ம நம்பிக்கை


மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)



  • நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.



  • நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்.



  • இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.


பூசை முறை


ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.


கும்பம் வைத்தல்: 


நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தனம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்


விஜய தசமி


நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு. இவ்விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும்.


நவராத்திரி விரத நியதிகள்



  • புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.



  • வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.



  • விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.



  • ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.



  • விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.



  • தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.



  • இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.


நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது


விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்



  1. தேவி மகாத்மியம்

  2. அபிராமி அந்தாதி

  3. துர்க்கா அஷ்டகம்

  4. இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)

  5. சகலகலாவல்லி மாலை

  6. சரஸ்வதி அந்தாதி

  7. மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்

  8. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்



நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் முதல் 3 நாட்கள் அம்பாளுக்காக அர்ப்பணிக்கப்படுகின்றன.

 

இந்த முதல் 3 நாட்களும் மாஹேஸ்வரி, கெளமாரி,வாராஹி என்ற பெயர்களில் துர்க்கைக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெறும்.

 

அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமிக்கு சிறப்புப் பூஜைகள் நடக்கும். மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என்ற பெயர்களில் இப் பூஜைகள் நடக்கும்.

 

கடைசி 3 நாட்கள் சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என்ற பெயர்களில் சரஸ்வதிக்கு பூஜைகள் செய்யப்படும்.


பூஜை நேரம் :


தினமும் காலையிலும், மாலையிலும் கொலு பொம்மைக்கு பூஜை செய்ய வேண்டும்.


வீட்டில் கொலு வைப்பவர்கள் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை அழைத்து அவர்களை அம்மனாக பாவித்து, அவர்களுக்கு தேவையான பொட்டு, வளையல், உணவு, இனிப்பு பலகாரம், ஆடை கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்.


மாலையில் 5.30 முதல் 7.00 மணிக்குள் கூட்டு பிரார்த்தனை மற்றும் பூஜை செய்வது நல்ல பலன்களை அளிக்கும்.


விரதம் இருப்பவர்கள் தங்களது விரதத்தை 6 மணிக்கு மேல் முடித்து கொள்ளவும்.


நவாரத்திரியின் மற்றொரு சிறப்பம்சம். எப்போதும் காலையில் செய்யும் பூஜை சிவனுக்கும், மாலையில் செய்யும் பூஜை அம்மனுக்கு உரியது என்றும் கூறப்படும்.

 

ஆனால், நவராத்திரி தினங்களில் காலை, மாலை இரண்டு வேளைகளில் செய்யும்பூஜையுமே அம்மனுக்கு உரியதுதான்.


நவராத்திரி சிறப்புகள் :


நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.


நவராத்திரி நாட்களில் வீட்டில் அரிசி மாவை பயன்படுத்தி கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும்.


நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.


நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும்.


தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தான தர்மங்கள் தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவி புரிகின்றன.


திருமணம் ஆகாதவர்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்