கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை


பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.


காய்கறி சந்தை வரும் 28-ம் தேதி திறக்கப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில்தான் சென்னையில் அதிக அளவில் கரோனா தொற்று பரவியது என்பதை கருத்தில் கொண்டு போதிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.


கோயம்பேடு மார்க்கெட் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், லாரி ஓட்டுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும்.


அதுகுறித்த விவரங்களை பதிவு செய்ய அனைவருக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட வேண்டும். மார்க்கெட் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்வதற்காக, கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தற்காலிக கரோனா ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.