திருப்பதி குடைகள்


திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தை ஒட்டி சென்னையிலிருந்து ஆண்டுதோறும் வெண்பட்டுக் குடைகள் கொண்டு செல்லப்பட்டு சமர்ப்பிக்கப்படுவது வழக்கம். பல நூற்றாண்டு காலமாக நடைபெற்றுவரும் இந்த உற்சவத்தை ஹிந்து தர்மார்த்த சமதி மேற்கொண்டு வருகிறது.


வழக்கமாக, இந்தக் குடைகள் பூக்கடை சென்னக் கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும். திருப்பதி குடை, யானைக் கவுனியைத் தாண்டுவது ஒரு பரபரப்பு செய்தியாகக் கூறப்படும்.


யானைக்கவுனையைக் கடக்கும்போது நிற்காமல் குடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துவிடுவார்களாம்.


இதற்கு உள்ளூரில் பல்வேறு கதைகளும் உள்ளன. என்றாலும் இது 180 வருடங்களாக நடந்து வரும் சம்பிரதாயம் என்கிறார்கள் உள்ளூர் மக்கள்.


இந்த ஆண்டு கொரோனா அச்சம் காரணமாக இந்த ஊர்வலம் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் திருப்பதி பெருமாளுக்கென தயார் செய்யப்பட்ட இந்தக் குடைகள் சென்னக் கேசவப் பெருமாள் கோயிலில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு திருப்பதியில் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


இதன்படி 20.09.2020 காலை பூக்கடை சென்னக் கேசவப்பெருமாள் கோயிலில் வைத்துக் குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்சானூர் தாயார் கோயிலுக்கு சமர்ப்பிக்கப்படும் 2 குடைகளும் திருமலை ஏழுமலையான் கோயிலுக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய 9 குடைகளும் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், யாகங்கள் செய்யப்பட்டன.


பின்பு இந்தக் குடைகள் திருப்பதி எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் குடைகளுக்கு விசேஷ தீபாராதனை நடைபெற்றபோது வானில் கருடன் வட்டமிட்டதைக் கண்டு பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


இந்தக் குடைகள் வரும் 22-ம் தேதி திருமலை பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.