விஜயகாந்த் (Vijayakanth, பிறப்பு: 25 ஆகத்து 1952) ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார்.
சினிமா, அரசியல் என தனி மனிதனாக அவரது அசுர வளர்ச்சி எல்லோருக்கும் ஆச்சர்யமூட்டும் ஒன்று. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நாராயணனாகப் பிறந்த இவரை வீட்டில் எல்லாரும் விஜயராஜ் என்றே அழைத்துவந்தனர்.
விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர்.
சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விசயகாந்து மதுரையில் வளர்ந்தார்.
சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார்.
இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார். திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.
இவர் கதாநாயகனாக நடித்து 1984-ல் மொத்தம் 18 படங்களும், 1985-ல் 17 படங்களும் வெளியாகின. இன்றுவரை இது அசைக்க முடியாத சாதனையாக உள்ளது.
தொடர்ந்து புரட்சிகரமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துவந்ததால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார்.
விஜயகாந்த் , 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விசய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என இருமகன்கள் உள்ளனர்.
1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார்
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் பின்நாட்களில் தமிழைத் தவிர வேறு எந்த மொழித் திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.
இத்தனைக்கும் இவரது படங்கள் சில தெலுங்கில் டப்பாகி ஆந்திர தேசத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்தன. அங்கிருந்து வாய்ப்புகள் வந்தபோதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்
பல திரைப்படங்களிலும் சண்டைக்காட்சிகளில்தான் விஜயகாந்தின் அறிமுகமே இருக்கும். சுவரில் கால்களை ஊன்றி எம்பிக்குதித்து எதிரிகளை தனது கால்களால் பந்தாடுவது இவரது ட்ரேட் மார்க்காகவே இருந்தது.
புதுமுக இயக்குநர்கள் பலருக்கு வாய்ப்பளித்தது மட்டுமின்றி, திரைப்படக் கல்லூரி மாணவர்கள் பலரையும் இயக்குநராக அறிமுகப்படுத்திய பெருமையும் விஜயகாந்தையே சேரும். ஆபாவானன் - ஆர்.அரவிந்தராஜ் கூட்டணியில் 'ஊமை விழிகள்', 'உழவன் மகன்' போன்ற திரைப்படங்களும், ஆர்.கே.செல்வமணியின் இயக்கத்தில் 'புலன் விசாரணை', 'கேப்டன் பிரபாகரன்' போன்ற வெற்றிப்படங்களை அளித்தவர்
விஜயகாந்த். ஒருகாலத்தில் திரைப்படக் கல்லூரியில் பயின்ற மாணவர்கள் நேராகக் கதை சொல்லும் இடமாக விஜயகாந்தின் அலுவலகம்தான் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார்
2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்
2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
பின்னர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார். இவர் அணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அத்தேர்தலில் இவர் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் இவரும், இவருடைய கூட்டணி கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தனர். இவர் போட்டியிட்ட உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில், 34,447 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம் தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது.
ரஜினியின் 100-வது படமான 'ராகவேந்திரா', கமலின் 100-வது திரைப்படமான 'ராஜபார்வை' போன்ற திரைப்படங்கள் அனைத்தும் தோல்வி கண்டிருந்த நிலையில், அந்தக் காலகட்டத்தில் நடித்த நடிகர்களில் 100-வது படம் வெற்றிப்படமாக அமைந்ததும் இவருக்குத்தான். 'ஊமை விழிகள்', 'புலன் விசாரணை', 'செந்தூரப் பூவே', 'சத்ரியன்' போன்ற படங்களில், தனது நிஜ வயதைவிட அதிகமான வயதுடைய கதாபாத்திரங்களில் நடித்தார்.
சூப்பர்ஸ்டார், உலகநாயகன் உட்பட திரைப்படத் துறையினர் இன்றும் விஜயகாந்தை 'விஜி' என்றுதான் அழைப்பார்கள். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை அவர் நடிகர் சங்கத் தலைவராகப் பதவி வகித்தார்.
அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கலைநிகழ்ச்சிகள் நடத்தி அப்போது கடனில் இருந்த நடிகர் சங்கத்தை மீட்டெடுத்தது இவரின் நிர்வாகத் திறமைக்கு மிகப்பெரிய உதாரணம்.
சினிமா, அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்ற விஜயகாந்த் தனது முன்கோபத்தாலும், உள்ளதை உள்ளபடிப் பேசிவிடுவதாலும் இழந்தவை அதிகம்.
ஆனாலும் அழுத்தமாகச் சொல்வோம். பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன்
தொகுப்பு மோகனா செல்வராஜ்