ஊடகங்களில் கருத்து சொல்லக் கூடாது ஈபிஎஸ் - ஓபிஎஸ் எச்சரிக்கை

ஊடகங்களில் கருத்து சொல்லக் கூடாது.. மீறினால் கடும் நடவடிக்கை.. ஈபிஎஸ் - ஓபிஎஸ் எச்சரிக்கை



அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் முதல்வர், துணை முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர். முதல்வர் வேட்பாளர் பற்றி அதிமுகவில் கடந்த சில நாட்களாக சர்ச்சை எழுந்த நிலையில் கட்சியினர் கட்டுப்பாட்டுடன் இணைந்து வெற்றி பெற வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர் யார் என்ற கேள்வி திடீரென எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்எல்ஏக்கள் கூடி முதல்வரை தேர்வு செய்வோம் என்று கூறினார் செல்லூர் ராஜூ.


செல்லூர் ராஜூ பற்ற வைத்த சின்னத் தீப்பொறியை கிளறி விட்டவர் ராஜேந்திர பாலாஜி. அவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக ட்வீட் போட்டார். அதே நேரத்தில் அவருக்கு ஆதரவாக ஊதி விட்டார் அமைச்சர் உதயகுமார். அதெல்லாம் முடியாது முடியாது அத்தனை கோட்டையும் அழிங்க முதல்ல இருந்து போடுங்க என்பது போல சொன்னார் அமைச்சர் ஜெயக்குமார். ராஜேந்திரபாலாஜி சொல்வதை எல்லாம் சீரியஸா பார்க்காதீங்க என்று சொன்னார் ஜெயக்குமார்.


சென்னை பசுமை வழிச்சாலை பரபரப்பாகவே காணப்படுகிறது. அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இந்த பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் இருந்தது போல ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்து அதிமுக தொடர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றும் கட்சிக்கு எதிராக ஊடகங்களின் கருத்து சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொண்டர்களின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் உரிய நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.