இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள் பகுதி 2

அன்பு வாசகர்களே



இல்லத்தரசிகளுக்கு இனிய யோசனைகள் பகுதி 2


இதில் உங்களுக்குத் தெரிந்ததும் இருக்கலாம் தெரியாததும் இருக்கலாம். 


நாம் சமையல் செய்யும் பொழுது நமக்கு தெரிந்தவற்றை மட்டும்தான் செய்வோம். ஆனால் நமக்கு தெரியாத பல சுலபமான வழிமுறைகள் எவ்வளவோ இருக்கின்றன.


அவற்றை நாம் தெரிந்து கொண்டாலே நமது வேலை பாதி சுலபமாகிவிடும். அவற்றில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன்.இதில் உங்களுக்குத் தெரிந்ததும் இருக்கலாம் தெரியாததும் இருக்கலாம். தெரிந்ததை விட்டு விட்டு தெரியாததை எடுத்துக் கொள்ளவும்.


*குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக் கொள்ளும்.

*பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

*தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

*உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

*கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

*ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

*தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

*பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல் போய்விடும்.

*வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

*சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

*சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

*இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.



நாளை பகுதி 3 தொடரும்



வணக்கம் அன்புடன் கார்த்திகா