திருச்சோற்றுத்துறை ஓதவனேஸ்வரர் கோவில்

ஓதவனேஸ்வரர் கோவில், திருசோற்றுத்துறை


திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் மூன்றாவது தலமாகும்.



திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. இத்தலம் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். அடியவரின் பசிதீர உணவு தரும் தலமெனப்படுகிறது.


கௌதமர், இந்திரன் தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 13வது சிவத்தலமாகும்.


வழிபடும் அடியவர்களின் பசிப் பிணி தீர, இறைவன் உணவு வழங்குபவன்; ஆதலின் இத்தலம் சோற்றுத்துறை எனப்பட்டது. (பிறவிப்பிணி தீர இறைவன் வீடு பேறு வழங்குபவன் என்பது பொருள்.)


அடியார்கள் பசிப்பிணியால் வருந்தியபோது இறைவன் அக்சய பாத்திரம் வழங்கி அனைவரின் பசியையும் போக்கியதால் இறைவன் இறைவிக்குத் தொலையாச் செல்வர், அன்னபூரணி என்ற திருப்பெயர்கள் வழங்கலாயிற்று.


தல வரலாறு:


ஒரு முறை திருச்சோற்றுத்துறை இருந்த நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு மக்கிள் பசியால் வாடினர். இத்தலத்தில் வசித்து வந்த அருளாளர் என்ற் சிவபக்தரும் பஞ்ச காலத்தில் பசியால் அவதிப்பட்டார்.


வருந்திய அருளாளன் இத்தல இறைவனிடம், "இப்படி மக்களை பசியில் தவிக்க விடுவது நியாயமா" என்று முறையிட்டார். திடீரென்று மழை பொழிய ஊரே வெள்ளக் காடானது.


அப்போது ஒரு பாத்திரம் வெள்ளத்தில் மிதந்து வந்தது. இதைப்பார்த்த அருளாளர் அதை கையில் எடுக்க, இறைவன் "அருளாளா! இது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.



இதை வைத்து அனைவருக்கும் சோறு போடு"' என்று அசரீரியாக குரல் கொடுத்து அருள் செய்தார். இந்த பாத்திரத்தை கையில் வைத்தபடி ஊராருக்கு சோறும், நெய்யும், குழம்புமாக போட்டு அவர்களின் பசி தீர்த்தார்.


இவ்வாறு இறைவன் அருளால் மக்களின் பசியைப் போக்கிய அருளாளருக்கும் அவர் மனைவிக்கும் இத்தலத்தில் கருவறை அர்த்த மண்டபத்திற்கு வெளியே சிலை உள்ளது.


இத்தல இறைவனை வழிபடும் அடியார்களின் பசிப்பணி தீர இறைவன் சோறு வழங்குபவன் என்னும் பொருளைத் தருவதுடன், உயிரைப்பற்றிய பிறவிப்பபிணி தீர வீடுபேறு தருபவன் என்ற பொருளும் உண்டு.


இது காசிக்கு அடுத்தபடியாக அட்சய பாத்திரம் கொடுத்த தலமாகும். சிறந்த சிவபக்தரான அருளாளருக்காக அட்சய பாத்திரம் அருளிய சிவபெருமான் எழுந்தருளி இருக்கும் இத்தலம் சப்தஸ்நான தலங்களில் ஒன்றாகும்.


அடியவர்களது பசிப்பிணியைப் போக்க உணவு வழங்கிய இறைவன் எழுந்தருளிய தலம் என்பதால் இந்த ஊருக்கு திருச்சோற்றுத்துறை எனும் பெயர் ஏற்பட்டது.


கோவில் அமைப்பு:


கிழக்கு நோக்கிய ஒரு முகப்பு வாயிலுடனும், சுற்றிலும் மதிற்சுவருடனும் இவ்வாலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர்.


முகப்பு வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. கொடிமரம் இல்லை.


கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன. .வெளிப் பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் பார்த்து அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிகை எழுந்தருளியுள்ளாள். இவருக்கு அன்னபூரணி என்ற பெயரும் உண்டு.


அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய சிவனுக்கு தொலையாச் செல்வர் என்றும், அவருக்குள் பாதியாகி அருள்புரியும் அம்மைக்கு அன்னபூரணி என்றும் திருநாமங்கள். அம்மையை உளமார உருகி வழிபட்டால், வறுமையும் பிணியும் விலகி விடும்.


பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம். இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ள தலங்கள் திருமணத் தலங்கள் என்று அழைக்கப்படும்.


அவ்வகையில் இத்தலத்திலும் அம்பாள் அன்னபூரணியின் சந்நிதி இறைவன் சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளதால் திருச்சோற்றுத்துறை ஒரு திருமணத் தலமாக கருதப்படுகிறது.


தல சிறப்புக்கள்


இத் தலம் சப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று.    ஊர்ப்பெயருக்கேற்ப சப்தஸ்தான விழாவில் ஏழூர்வலம் வரும்   அடியார்களுக்கு இங்கு அன்ன தானம் நடைபெறுகிறது.   


இத்தலத்தில் சமயக்குரவர்கள் பாடிய பதிகக் கல்வெட்டுக்கள் உள்ளன.


இத்தலத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் மூர்த்தியாக அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.


தனிக்கோயிலில் அம்பாள் திருமணக்கோலமாக காட்சி தருகிறாள்.


முதலாம் ஆதித்த சோழன் இக்கோயிலுக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். சோழர் காலக் கல்வெட்டுக்கள் இக்கோயிலுக்கு அம்மன்னர்கள் விளக்கெரிக்கவும், நிவேதனத்திற்காகவும், விழாக்கள் எடுக்கவும் நிலமும் பொன்னும் தந்த செய்திகளைத் தெரிவிக்கின்றன.


கோயில் தகவல்கள்
மூலவர்: ஓதனவனேஸ்வரர், தொலையாச் செல்வர், சோற்றுத்துறை நாதர்.
உற்சவர்: தொலையாச் செல்வர்
தாயார்: அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை.
உற்சவர் தாயார்: ஒப்பிலாம்பிகை.
தல விருட்சம்: பன்னீர் மரம்
தீர்த்தம்: காவிரி
ஆகமம்: சிவாகமம்


பதிகம்:
திருநாவுக்கரசர் - 4
திருஞானசம்பந்தர் - 1
சுந்தரர் - 1


திருவையாற்றிலிருந்தும் திருக்கண்டியூரிலிருந்தும் இத்தலத்திற்குச் செல்லப் பேருந்து வசதிகள் உள்ளன. மேலும் கும்பகோணத்திலிருந்து அய்யம்பேட்டை வழியாக கல்லணை மற்றும் திருவையாற்றுக்குச் செல்லும் பேருந்து மூலமாகவும் இத்தலத்தை அடையலாம்.


தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்டியூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் குடமுருட்டியாற்றின் தென் கரையில் திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறைநாதர் கோயில் உள்ளது. இத்தலம் கண்டியூர் - அய்யம்பேட்டை சாலையில் உள்ளது.


இவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்


தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


நன்றி. 


ஓம் சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம்...சிவமே அன்பு....


திருச்சிற்றம்பலம்


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்