64 திருவிளையாடல்


திருவிளையாடல் - இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை



இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை... – நீ



இருக்கையிலே எனக்கேன் பெருஞ் சோதனை  இறைவா…

 


மாமன் திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ..!


நாம் அனைவரும் இந்த  படத்தை  பல முறை பார்த்திருப்போம்
படத்தில்  வரும் இந்த பாடல் வரிகளின் கதை இதோ  



மாமனாக வந்து வழக்குரைத்த படலம்!




சுந்தரேச பாதசேகரனின் ஆட்சிக்காலத்தில் தனபதி என்ற வணிகர் தன் மனைவி சுசீலையுடன் மதுரை நகரில் வசித்து வந்தார். பெரும் செல்வந்தரான இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.


ஆஸ்தியை வருங்காலத்தில் ஆள ஒரு குழந்தை வேண்டுமே! சுந்தரேச பெருமானிடம் அவர்கள் வைக்காத வேண்டுதல் இல்லை. வருடங்கள் ஓடியதே தவிர குழந்தை பிறக்கிற வழியைக் காணோம்.


எனவே, தன் தங்கை மகனை தனபதி தத்தெடுத்துக் கொண்டார். அந்தக் குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்தனர். தனபதியின் தங்கைக்கும், சுசீலைக்கும் இடையே அடிக்கடி தகராறு எழும்.


தனபதியும் தன் மனைவியின் சொல்கேட்டு தங்கையைத் திட்டுவார். ஒருமுறை ஆவேசமடைந்த தங்கை, என் பிள்ளையால் தானே உங்களுக்கு இறுதிக்கடன் நடந்து, நீங்கள் சொர்க்கத்தை அடைய முடியும். நான் இல்லாவிட்டால் உங்கள் நிலை என்ன? என்று அண்ணனுக்கு குழந்தையில்லாத நிலையைக் குத்திக்காட்டி பேசிவிட்டாள்.


வருத்தமடைந்த தனபதி, சுந்தரேசா! எனக்கு குழந்தை இல்லாததால் தானே இப்படி ஒரு வசைக்கு ஆளானேன். இப்பிறவியில் என் வேண்டுதலை ஏற்க மறுத்தாய். அடுத்தபிறவியிலாவது அந்த பாக்கியத்தைக் கொடு, என வேண்டி விட்டு, தங்கை மகன் பெயரில் தன் சொத்துக்களை ஒப்படைத்து விட்டு, மனைவியுடன் காட்டுக்கு சென்று விட்டார்.


முழுமையாக ஆன்மிகவாழ்வில் ஈடுபட்டனர் அந்த தம்பதியர். தனபதி சென்றதும், அவரது பங்காளிகள் தங்களுக்கும் சொத்தில் பங்குண்டு என தனபதியின் தங்கையிடம் சண்டைக்கு வந்தனர்.


பொய் வழக்குகளைப் போட்டு, சொத்தை முழுமையாக அபகரித்துக் கொண்டனர். அவர்கள் நடுரோட்டுக்கு வந்துவிட்டனர்.


தன் அண்ணனின் மனம் புண்படும்படி பேசியதற்கு தனக்கு தகுந்த தண்டனை கிடைத்தது என்று உணர்ந்த தங்கை, சுந்தரேசர் கோயிலுக்கு மகனுடன் சென்று, இனி நாங்கள் என்ன செய்வோம்? என்று உருகி அழுதாள்.


அவளது கண்ணீர் சுந்தரேசரை உருக்கியது. மேலும், தன் பக்தனின் தங்கை அநியாயமாக ஏமாற்றபட்டதால், அவர் அவளுக்கு அருள்பாலிக்க திருவுளம் கொண்டார்.


மகளே! நீ ஊர் பெரியவர்கள் முன்னிலையில் வழக்குத் தொடு. நான் வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன், என்று அசரீரி ஒலித்தது. சுந்தரேசரே தனக்கு அருள்பாலித்து விட்டதால், அவள் வழக்குத் தொடுத்தாள்.


தனபதியின் பங்காளிகள் தங்களுக்கே சொத்து சொந்தம் என்றனர். அந்த சமயத்தில், தனபதியே அங்கு வந்துவிட்டார். தங்கை அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறினாள்.


தனபதி அவளுக்கு ஆறுதல் சொன்னார். தன் தங்கை மகனுக்கே சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்ததாக தனபதி ஊராரிடம் சொன்னார். இந்த சமயத்திலும் கூட அந்த பங்காளிகள், இவர் தனபதியே அல்ல! அவரைப் போலவே தோற்றம் கொண்டவர்.


காட்டுக்குச் சென்றவர் எப்படி திடீரென வரமுடியும்? என வாதாடினர். நான் வேறு ஆளாக இருந்தால், உங்களை எனக்கு அடையாளம் தெரிந்திருக்காது. இதோ! இவரே ஊர் தலைவர்.


இவன் எனது பங்காளி சடையப்பன். இவன் முத்தப்பன், என்றெல்லாம் எல்லாரையும் அடையாளம் காட்டினார். மேலும், தனது சொத்து விபரங்களை புள்ளி விபரமாக எடுத்துச் சொன்னார். பஞ்சாயத்தாருக்கு தனபதி மேல் நம்பிக்கை வந்துவிட்டது.


வழக்கு தொடுத்தவர்கள் இங்கிருந்து போய் விட வேண்டும். இல்லாவிட்டால், அரசவையில் ஒப்படைக்கப்பட்டு, கடும் தண்டனையை அனுபவிக்க நேரிடும், என எச்சரித்தனர். அவ்வளவுதான்! அடுத்த கணமே அங்குநின்ற எல்லாரும் ஓடிவிட்டனர்.


பின், தனபதி தன் சொத்துக்களை தங்கை மகன் பெயரில் சாசனம் செய்து வைத்தார். உடனடியாக மறைந்துவிட்டார். அதன்பிறகே வந்தவர் தனபதி அல்ல! சுந்தரேசரே மாமனாக வந்து வழக்குரைத்தவர் என்று பஞ்சாயத்தார் புரிந்துகொண்டனர்.


மன்னன் சுந்தரேச பாதசேகரன் இந்த தகவல் அறிந்து சுந்தரேசரை வணங்கி மகிழ்ந்தான். சிலகாலம் கழித்து அவன் இறையடி எய்தினான். அவனது மகன் வரகுணபாண்டியன் பொறுப்பேற்றான்.


தென்னாடுடைய  சிவனே  போற்றி  எந்நாட்டவர்க்கும்  இறைவா போற்றி 


பக்தியுடன்    மோகனா  செல்வராஜ்