பௌர்ணமி வழிபாடு என்பது புராண காலத்திலும், பண்டைய காலத்திலும் இருந்து வழி வழியாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
தை மாதத்தில் சூரியன் உத்தராயணம் எனப்படும் வடக்கு நோக்கிய தனது பயணத்தை துவங்குகிறது. அந்த சூரியனின் வடக்கு திசை நோக்கிய பயணத்தின் இறுதி மாதமாக ஆனி மாதம் இருக்கிறது.
தமிழ் வருட கணக்கின்படி சித்திரை, வைகாசி அடுத்து மூன்றாவது மாதமாக இந்த ஆனி மாதம் வருகிறது. ஆனி மாதம் பல ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விழாக்கள், தினங்கள் கொண்ட மாதமாக இருக்கிறது.
இந்த மாதத்தில் வருகின்ற ஒரு சிறப்பான நாள் தான் ஆனி பௌர்ணமி. இந்த ஆனி பௌர்ணமி தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும், அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இந்த ஆனி மாத பௌர்ணமி தினம் மூலம் நட்சத்திர தினத்தில் வருகின்றது. ஆனி மாத பௌர்ணமி தினத்தன்று காரைக்காலில் காரைக்கால் அம்மையாரின் தெய்வீக ஆற்றலை போற்றும் விதமாக வருடந்தோறும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது.
விரதமுறை :
பௌர்ணமியில் பகல் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமுறை மேற்கொள்ள வேணடும். மாலையில் கோவில்களில் அல்லது வீட்டில் வழிபாடு மேற்கொண்டு உணவு உண்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வழிபாட்டின்போது அம்மன் குறித்த பாடல்கள் பாராயணம் செய்தல் நன்று.
ஆனி மாத பௌர்ணமியில் அம்பிகைக்கு கருப்பு வஸ்திரமும், முத்தாபரணமும் அணிவித்து வழிபாடு செய்ய வேண்டும்.
மேலும் கோயில்களில் இறைவனுக்கு முக்கனிகள் படைத்து பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. ஆனி பௌர்ணமியில் தங்களின் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜைகள், வழிபாடுகள் செய்வது மிகவும் சிறந்த பலன்களை தரும்.
பலன்கள் :
இந்த ஆனி பௌர்ணமி வழிபாட்டின் மூலம் எடுத்த காரியம் யாவிலும் வெற்றி பெறலாம்.
ஆனி பௌர்ணமி அன்று கண்ணனை நினைத்து விரதமிருக்க காதல் கைகூடும். இன்றைய தினத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டுதல்கள் நிறைவேறும்.
ஆனி பௌர்ணமி அன்று சாவித்திரி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மாங்கல்ய பலம், ஐஸ்வரியம், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஆனி பௌர்ணமி தினத்தில் கோவில்களில் பக்தர்கள் அருந்துவதற்கு பழச்சாறு போன்றவற்றை தானம் செய்வது நல்லது. ஆனி மாதம் பௌர்ணமி தினத்தில் மேற்கூறிய முறையில் விரதம் இருந்து தெய்வங்களுக்கு பூஜை செய்து வழிபடுபவர்களுக்கு ஐஸ்வர்யங்கள் பெருகும்.
பெண்களின் கணவர்களின் ஆயுள்பலம் கூடும். விரும்பிய நபரையே மணமுடிக்கும் அமைப்பு உண்டாகும்.
நீண்ட காலமாக புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். மாணவர்கள் விரும்பிய உயர் கல்வியை கற்கும் சூழல் ஏற்படும். கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீள்வார்கள். உணவு, உடை ஆகியவற்றிற்கு கஷ்டப்படும் நிலை ஏற்படாது.
ஆனி பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகள் அரச யோகத்தினைப் பெற்றிருப்பர் என்பது ஜோதிட விதி
நன்றி. ஓம் நமசிவாய
தொகுப்பு மோகனா செல்வராஜ்