நெல்லை மாநகர ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சாதுசிதம்பரம் (54), பாளை கேடிசி நகரில் குடியிருந்து வந்தார்.
இவரது மருமகன், 2 வாரங்களுக்கு முன் கொரோனாவுக்கு பலியானார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சாதுசிதம்பரமும் கொரோனா பாதித்து நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவர், நேற்று அதிகாலை இறந்தார். இவருடன் நெல்லை மாவட்டத்தில் கொரோனா பலி 19 ஆக உயர்ந்தது.
ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: தொலைக்காட்சி வாயிலாக பாடம் கற்பிக்க குறிப்பிட்ட கால அட்டவணை வெளியிடப்படும்.
தற்போதைய சூழ்நிலையில், அரசு பள்ளிகளை திறப்பது குறித்து சிந்திக்க நேரமில்லை.
சென்னை மாநகராட்சி சார்பில், பள்ளி மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு போன் வழங்குவது வரவேற்கத்தக்கது. அங்கு குறைவான மாணவர்கள் படிப்பதால் ஆன்லைன் வசதி எளிதில் பெற்று கல்வி கற்க முடியும்.
மாநில அளவில், அதற்கு சாத்தியமில்லை. ஆன்லைனில் தனியார் பள்ளிகளில் வகுப்பு எடுப்பது தொடர்பாக, 2 நாளில் வழிமுறைகளும், கட்டணம் பெறும் முறையும் அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
நெய்வேலி என்.எல்.சி அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் என்ற ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே 13 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்தார்.