சோகத்தில் கேரளா


கணவன் உயிரிழந்த மறுநாளில், பெண் குழந்தை பெற்றெடுத்த மனைவி!


கேரளாவை சேர்ந்த நிதின் சந்திரன்- ஆதிரா கீதா தம்பதியர் துபாயில் வசித்து வந்துள்ளனர். ஊரடங்கால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதால் இவர்களால் ஊர் திரும்பமுடியவில்லை.


கர்ப்பிணியாக இருந்த ஆதிராவை வெளிநாடுவாழ் இந்தியர்களை தாயகம் அழைத்துவர மத்திய அரசால் இயக்கப்பட்ட வந்தே பாரத் விமானம் மூலம் ஆதிரா, கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு அழைத்து வரப்பட்டார். 


இந்நிலையில் நிதின் நேற்று உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே இதயம் சம்பந்தமாக பிரச்னைகள் இருந்ததாகவும், மேலும் ரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 


கொரோனா பரிசோதனைகளுக்கு பிறகு நிதினின் உடல் இந்தியா எடுத்து வரப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. 


இவர்கள் இருவருக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், நிதின் கடந்த 6 ஆண்டுகளாக துபாயில் வேலை செய்து வந்ததாகவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு ஆதிராவும் துபாயில் வேலை பார்த்து வந்ததாகவும், பிரசவத்திற்காக கேரளா வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். கணவரின் மரணம் தொடர்பாக மனைவிக்கு எந்த தகவலும் உறவினர்கள் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது


நிதின் உயிரிழந்த மறுநாள் அவரது மனைவி ஆதிரா பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். குழந்தையின் முகத்தை தந்தை பார்க்க முடியாத துயர நிலை ஏற்பட்டுள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.