கமல்ஹாசன் தான் இயக்கி நடிக்கும் தலைவன் இருக்கின்றான் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி உடன் கடந்த மே மாதம் இன்ஸ்டாகிராம் நேரலையில் கலந்துரையாடினார். இது மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து நேற்று கமல்ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் இன்ஸ்டாகிராம் நேரலையில் இணைந்தனர்.
ரஹ்மானின் இசை திறமையை முதலில் தான் உணராமல் போனதாகக் கூறிய கமல்ஹாசன், இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பல் ஏறி போயாச்சு பாடல் முதலில் தனக்கு பிடிக்கவில்லை என்றார்.
பாடல் படமாக்கப்பட்டபோது ரஹ்மானின் திறமையை எண்ணி தான் வியந்ததாகவும் கூறினார். தலைவன் இருக்கின்றான் படத்திற்கும் சிறப்பான இசையை ரஹ்மான் வழங்கியுள்ளதாக கூறினார்.
மேலும் வந்தேமாதரம் போல தமிழ்த்தாய் வாழ்த்தையும் ரஹ்மான் இசையமைத்து பாட வேண்டும் என்ற தனது விருப்பத்தை கமல் வெளிப்படுத்தினார்.
ரஹ்மான் வேதனை
நடிகர், நடிகை, அரசியல்வாதி என யாருடைய ரசிகராகவும் ஒருவர் இருக்கலாம் என்று கூறிய ரஹ்மான், எல்லாவற்றிற்கும் முதன்மையாக தங்களுக்கென ஒரு குடும்பம் உள்ளதை யாரும் மறந்துவிடக் கூடாது என்றார்.
அமெரிக்காவில் நடந்த நிறவெறித் தாக்குதல் அந்நாட்டை பல ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டதாகவும் ரஹ்மான் வேதனை தெரிவித்தார்.