விழுப்புரம், புதுச்சேரி எல்லையில் அமைந்துள்ள ஊசுட்டேரியின் மொத்த பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர், இந்த ஏரியின் ஒட்டுமொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 15 சதுர கிலோமீட்டர் ஆகும்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடூர் அணைக்கட்டிலிருந்து இந்த ஏரி நீரைப் பெறுகிறது. 2008ஆம் ஆண்டு இந்த ஏரியானது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து ஆண்டுதோறும் இங்கு பறவைகள் வருகின்றன, குளிர்காலத்தில் இங்கிருந்து கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு செல்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்காவும் உறைவிடத்திற்காகவும் இங்கு வந்து செல்வதால் புதுச்சேரியின் வேடந்தாங்கல் எனவும் இந்த உசுட்டேரி அழைக்கப்படுகின்றது.
International Union for Conservation of Nature and Natural Resources அமைப்பும், Bombay History Society அமைப்பும் ஆசியாவில் மிகவும் முக்கியமான பறவைகள் வாழிடமாக ஊசுட்டேரியை அறிவித்துள்ளது.
எண்ணூர் துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ள இயற்கை எரிவாயு முனையத்திலிருந்து திருவள்ளூர் வழியாக பெங்களூருக்கும் புதுச்சேரி நாகப்பட்டினம் மதுரை வாயிலாக தூத்துக்குடி வரையிலுமான 1446 கிலோமீட்டர் தூரத்திற்கு இயற்கை எரிவாயு எடுத்து செல்வற்கான குழாய் அமைக்கும் பணியை இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.
இதற்காக ஊசுட்டேரியின் தமிழக எல்லையில் உள்ள 38.5 ஹெக்டேர் மற்றும் புதுச்சேரி எல்லையில் உள்ள 7.5 ஹெக்டேர் பரப்பளவு பகுதியை பயன்படுத்திக்கொள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் தேசிய வனவுயிர் வாரிய அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது.
இப்படி ஒரு சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஏரியின் மையப்பகுதியிலிருந்து மிக அருகிலேயே பூமியைத் தோண்டி இயற்கை எரிவாயு குழாய் அமைப்பதால் ஏரியின் இயல்பு நிலை பாதிக்கும் எனவும், ஒருவேளை குழாய் கசிவு விபத்து ஏற்பட்டால் இந்த சரணாலயத்தின் சூழல் சமநிலையே சீர்கெடும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.