சேப்பங்கிழங்கு - ஒரு கண் ணோட்டம்


சேம்பு (அ) சேப்பங் கிழங்கு (Colocasia esculenta) என்பது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த ஒரு வித்திலைத் தாவரமாகும்.


இத்தாவரத்தின் குடும்பப் பெயர் அரேசியா (Araceae) என்பதாகும். தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணை கண்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் உலகளவில் வெப்பமண்டலம் மற்றும் துணை வெப்பமண்டல பகுதியிலும் பயிரிடப்படுகிறது.


இது ஒரு மூலிகைத்தாவரம் என்பதாலும், இதன் கிழங்கு உணவாகப் பயன்படுவதாலும் ஆசியப் பகுதியில்  பல ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்பட்டுவருகிறது.


சேப்பங்கிழங்கு ஒரு வகை பசைத்தன்மை உடைய ஒரு கிழங்கு வகையாகும். இயற்கையான சத்துக்களை அதிகம் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு இயற்கை உணவாக கிழங்குகள் இருக்கின்றன. கிழங்கு வகைகளில் பல வகைகள் உண்டு.


அதில் நமது நாட்டில் பலராலும் விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு வகையாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. 


நமது இந்திய நாடு முழுவதும் தற்போது பயிரிடப்பட்டு வருகிறது.


அவ்வப்போது நம் வீட்டு சமையலிலும் சேப்பங்கிழங்கு, காரக்குழம்பு சேர்த்து வருவோம். ஆனால், அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி பலருக்கும் தெரியாது அல்லவா?


சேப்பங்கிழங்கு சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா?


இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


சேப்பங்கிழங்கு நன்மைகள் ஊட்டச்சத்து கிழங்கு வகை உணவுகள் அனைத்துமே பொதுவாக மனிதர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்தவையாகவே இருக்கின்றன.


அதற்கு இந்த சேப்பங்கிழங்கும் விதிவிலக்கல்ல. இந்த சேப்பங்கிழங்கு மாவில் உயர்ந்த அளவு கார்போ சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளது. பச்சை சேப்பங்கிழங்கில் 10% கார்போ சத்து இருக்கும் போது, சேப்பங்கிழங்கு மாவில் 67% உள்ளது. இதேபோல், சேப்பங்கிழங்கில் நார்சத்து 12% ஆகவும், அதுவே சேப்பங்கிழங்கு மாவில் 31% ஆகவும் உள்ளது. 


சேற்றுப்புண் :  மழைக்காலங்களில் பலருக்கும் சேற்று புண் ஏற்படுவது இயற்கையானது தான். சேற்றுப்புண் போன்ற பாதம் தொடர்பான பாதிப்புகளில் சேப்பங்கிழங்கு பாதத்தில் இருக்கும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது. சேப்பங்கிழங்கில் பூஞ்சை எதிர்ப்பு தன்மைகள் இல்லாத காரணத்தால் பாதத்தில் இருக்கின்ற ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்த மட்டும் இது துணை புரிந்து சேற்றுபுண்கள் வேகமாக குணமாக உதவுகிறது. 


உடல் எடை  : உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் உணவு விடயங்களில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும். உடல் எடையை குறைப்பதில் சேப்பங்கிழங்கு மிகவும் உதவி புரிகின்றன சேப்பங்கிழங்கு கொழுப்பு இல்லாதது. குறைந்த கலோரிகள் கொண்டது. இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது.


போலேட் சத்து : பெண்கள் கருவுற்ற காலத்தில் உடலுக்கு சத்துக்களை தரும் வகையிலான உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். குறிப்பாக போலேட் சத்துக்கள் நிறைந்த உணவை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.


சேப்பங்கிழங்கில் இந்த ஃபோலேட் சத்து அதிகம் உள்ளன. கருவுறுதலுக்கு முந்தைய காலங்களிலும், கர்ப்ப காலங்களிலும் போதிய அளவு போலேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால், நரம்புக் குழாய் பாதிப்பு மற்றும் இதர பிறப்பு குறைபாடுகளை ஆரம்ப கட்டத்திலேயே தடுத்து ஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும்.


விஷ முறிவு :  சில வகை உணவுகளில் விஷத்தன்மை சிறிது இருப்பதால் அது சாப்பிட்டவர்களுக்கு பல உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் பூச்சிகள், வண்டுகள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்தால் அதன் விஷம் உடல் முழுவதும் பரவி நமக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். சேப்பங்கிழங்கை அரைத்து பூச்சிக் கடி பட்ட இடத்தில் தடவுவதால் உடலில் பரவும் விஷம் முறிகிறது.


இந்த சேப்பங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்கனவே சாப்பிட்ட உணவில் கலந்திருக்கும் நஞ்சும் முறிந்து உடல்நலத்தை மேம்படுத்துகிறது. அமிலம் மற்றும் காரத்தன்மை மனிதன் ஆரோக்கியமாக இருக்க அவனது உடலில் அமிலம் மற்றும் காரச் சத்து சரியான அளவில் இருப்பது அவசியமாகும்.


சேப்பங்கிழங்கில் கால்சியம் மாவுச்சத்து அதிகம் உள்ளது. கால்சியம் வடிவத்தில் இருக்கும் கால்சியம் க்ளோரைடு, மனித உடலில் அமிலம் மற்றும் காரத்தன்மையின் சமநிலையை நிர்வகிக்க தேவைப்படும் ஒரு முக்கிய சத்தாக இருக்கிறது. எனவே சேப்பங்கிழங்கை அதிகம் சாப்பிடுவதால் உடலின் அமில, காரத்தன்மையை சரிசமமாக வைத்திருக்கலாம். 


இதயம் : நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தத்தை பாய்ச்சுகின்ற இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு வலிமையாக இருக்க வேண்டியது அவசியம்.


சேப்பங்கிழங்கை வாரம் மூன்று அல்லது நான்கு முறை சமைத்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, மாரடைப்பு, இதய ரத்த குழாய்களில் அடைப்பு போன்றவை ஏற்படுவது தடுக்கப்பட்டு நீண்ட ஆயுட்காலம் உண்டாகிறது.


செரிமானமின்மை : சிலருக்கு சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகா நிலை ஏற்படுகிறது. செரிமானக் கோளாறுகளுடன் மலச்சிக்கல், வாயு சேர்த்தல் மற்றும் இதர வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் திறன் கொண்ட இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது.


இதில் இருக்கும் மாவுப்பொருள் ஒரு இயற்கைய மலமிளக்கியாக செயல்படுகிறது. எனவே இந்த கிழங்கை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு மேற்கண்ட அனைத்து பிரச்சனைகளும் வெகு விரைவில் தீரும்.


சரும வியாதிகள் :  பல்வேறு வகையான சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மூலிகைத் தீர்வாக கூவைக்கிழங்கு அமைகிறது. குறிப்பாக வைசூரி மற்றும் தோல் அழுகல் போன்றவற்றால் உண்டாகும் சரும தொற்று மற்றும் அரிப்பைப் போக்க சேப்பங்கிழங்கை சாப்பிடுவதன் மூலமும், அந்த சேப்பங்கிழங்கை அரைத்து சரும பாதிப்புகள் ஏற்பட்டுள்ள இடங்களில் தடவுவதன் மூலமும் சரும வியாதிகள் அனைத்தையும் வெகு சீக்கிரத்தில் போக்க முடிகிறது.


புற்று நோய் : சேப்பங்கிழங்கு பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் தன்மை கொண்டதாக இருக்கிறது. வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புற்று நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சேப்பங்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. இதில் இருக்கும் சத்துக்கள் ஜீரண உறுப்புகளில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. 


சேப்பங்கிழங்கு இலையிலும் மருத்துவ குணம் அதிகம். வட மாநிலங்கள் மற்றும் கேரளாவில் தேங்காய்ப்பாலில் சேப்பங்கிழங்கு இலையைச் சேர்த்து வேக வைத்து சூப்பாக பருகுவார்கள்.


உத்தரகாண்ட் போன்ற வட மாநிலங்களில் இலையை பக்கோடா செய்தும் சாப்பிடுவர். சேப்பங்கிழங்கு இலையில் நீரிழிவு நோயை அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்து. சேப்பங்கிழங்கு இலையை சாப்பிடுவதால் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது.


தொகுப்பு மோகனா செல்வராஜ்