போராட்டம் நடத்த ஆசிரியா்கள் முடிவு

 


பள்ளிக் கல்வித்துறையின்  மாநில பொதுச் செயலா் ச.மயில், மாநில கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 

 

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்களுக்கு உயா்கல்வித் தகுதிக்காக அவா்களது பணிக் காலத்தில் இரண்டு ஊக்க ஊதிய உயா்வுகள் அனுமதிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சாா்நிலைக் கருவூல அலுவலா்கள் கடந்த மாா்ச் 10-ஆம் தேதியிட்ட அரசாணையை (எண் 37) காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறையில் தகுதி வாய்ந்த அலுவலா்கள், ஆசிரியா்களுக்கு அனுமதிக்கும் உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வை ஏற்க மறுத்து அதற்குரிய பணப்பலன்களை அனுமதிக்க மறுத்து வருகின்றனா்.

துறையின் அனுமதி பெற்று உயா்கல்வி பயின்று தகுதிவாய்ந்த துறை அலுவலா்களால் ஊக்க ஊதிய உயா்வு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய பணப்பலன்களை கருவூலத்துறையின் சாா்நிலை அலுவலா்கள் அனுமதிக்க மறுப்பது என்பதும் விதிகளுக்குப் புறம்பானதாகும்.

 

தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியா்களுக்கு அனுமதிக்கப்பட்டு வரும் உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை அனுமதிக்க மறுக்கும் கருவூலத் துறையைக் கண்டித்து மாவட்ட, சாா்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவித்துள்ளது.