மணமகனுக்கு 200 ரூபாய் அபராதம்


 


உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் முகக் கவசம் அணியாமல் ஊரவலம் வந்த மணமகனுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனால் தொழில்துறைகள் முடங்கியுள்ளதோடு மக்களில் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் மாநில அரசுகள் அனுமதியளித்து வருகின்றன.


மேலும் பொதுவெளியில் நடமாடும் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூரில் நேற்று முன்தினம் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதற்காக மணமகன் அன்றிரவு ஊரவலமாக அழைத்து வரப்பட்டார்.


அதில் பூக்களால் ஆன 'செஹ்ரா' மற்றும் பண மாலையை அணிந்திருந்த மணமகன் முகக் கவசம் அணியவில்லை.


இதனை பார்த்த, அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த மாவட்ட நீதிபதி ஆஞ்சன் குமார், மணமகன் சென்ற காரை நிறுத்தி முகக் கவசம் அணியாத குற்றத்துக்காக 200 ரூபாய் அபராதம் விதித்தார்.