கரோனாவால் இறப்பவர் எண்ணிக்கை-திருமாவளவன்

 



கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுகிறதா?- தமிழக அரசுக்கு திருமாவளவன் கேள்வி


உயிரிழப்பு மிகக் குறைவாக இருக்கிறது என்று காட்டுவதற்காக கரோனாவால் இறப்பவர்களையும் வேறு காரணங்களால் உயிரிழந்ததாகச் சொல்லும்படி வாய்மொழியாக உத்தரவிடப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அது உண்மையாக இருந்தால் மிகப்பெரிய ஆபத்தில் தமிழ்நாட்டை ஆட்சியாளர்கள் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என்றே பொருள்படும் என திருமாவளவன் எச்சரித்துள்ளார்.


இதுகுறித்து திருமாவளவன்  இன்று வெளியிட்ட அறிக்கை:


“தமிழ்நாட்டில் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை மறைக்கப்படுவதாகவும் அதைக் குறைத்துக் காட்டும்படி மாவட்ட மருத்துவமனைகளுக்கு வாய்மொழி உத்தரவு அளிக்கப்பட்டு இருப்பதாகவும் வருகிற செய்திகள் உண்மைதானா என்பது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.


இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்லும் எந்த எச்சரிக்கையையும் தமிழக அரசு பொருட்படுத்தவில்லை. இதனால் இன்னும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் சென்னையில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்களென்றும் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது.


கரோனா பேரிடர் முழு அடைப்புக் காலத்தை மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி உருப்படியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அதனால் உலக அளவில் இந்தியா 6- இடத்துக்கு வந்துவிட்டது. இந்தியாவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கையில் தமிழ்நாடு இரண்டாம் இடத்துக்கு வந்துவிட்டது.