யோகா எனும் வாழ்க்கை - பகுதி 1


யோகக் கலை என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும்.


யோகா என்னும் கலை வாழ்க்கை, அறிவியல் மற்றும் வாழும் கலை ஆகும். பதஞ்சலி முனிவரால் இக்கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்து வழிவழியாய் வரும் ஓர் ஒழுக்க நெறியாகும். இது உடலையும் உள்ளத்தையும் நலத்துடன் வைத்துப் போற்றும் ஒழுக்கங்களைப் பற்றிய நெறி.


யோகம் என்ற சொல்லுக்கு இணைதல் அல்லது இணக்கமாக இருத்தல் என்று பொருள். யோகம் என்பது இந்தியாவில் உள்ள ஆறு தத்துவமுறைகளில் முக்கியமான ஒன்றாகும். யோகாவின் தோற்றம் விவாதத்திற்கு உட்பட்டு இருக்கின்றது. இது வேத காலத்திற்கு முன்பே தோன்றி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


சிந்து சமவெளி நாகரிகத்தின் தளங்களில் உள்ள சில முத்திரைகள் ஒரு பொதுவான யோகா அல்லது தியான நிலைகளை புள்ளிவிவரங்கள் காட்டி சித்தரிக்கின்றன. யோகத்தின் பாதையில் செல்பவர் யோகி எனப்படுகிறார்.


நோன்பியர் எனப்படும் தவ முனிவர்கள் கைகளை ஊன்றிக்கொண்டு இருக்கையில் அமர்ந்திருந்தது பற்றி நற்றிணைப் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.இதனை அது கையூண் இருக்கை என்று குறிப்பிடுகிறது


யோகசூத்திரத்தின் வரலாறு:


1921-ம் ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சுடுமண் முத்திரைகளில், சித்தாசனத்தில் அமர்ந்திருக்கும் சித்தன் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. அது 4,500 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்பொருளியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


இதனைத் தொடர்ந்து, 2,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முனிவர்களான பதஞ்சலி மற்றும் திருமூலர் ஆகிய இருவரும் யோகக்கலையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர். அவர்கள் தங்களின் அனுபவத்தின் மூலம் கிடைத்த தகவல்களை பாடல்களாகவும், சூத்திரங்களாகவும் எழுதிவைக்கப்பட்டவைகள் தான் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.


மச்சமுனி, வான்மீகர், சுந்தரானந்தர், கொங்கணர், குதம்பை சித்தர், கோரக்கர், சிவவாக்கியர், போகர், ஆகிய சித்தர்களின் முயற்சியால் யோகாசனம் மேம்படுத்தப்பட்டது.


மன்னர் ஆட்சி வந்தபிறகு கல்விமுறைகளில் ஒன்றான யோகக்கலை அமைச்சுப்பணியில் இருக்கும் நிர்வாகத்தினர்களுக்கும், கோவில்பணியில் இருப்பவர்களுக்கும் போதிக்கப்பட்டு வந்தது.


ஒரு சில மன்னர்களின் ஆலோசனைப்படி நாட்டு மக்கள் அனைவருக்கும் யோகா கற்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அந்த காலகட்டத்தில் யோகக்கலையை கற்றுத்தேர்ந்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருந்திருக்கக்கூடும்.


1920 க்கு பிறகே யோகம் அனைவருக்குமான கலையாக மாறியது. இதற்குப் பிறகும் இது குறிப்பிட்ட மதத்தை சார்ந்தகலை எனவும், இதை பழகினால் குடும்ப வாழ்க்கையை துறந்து சன்யாச வாழ்க்கைக்கு சென்று விடுவார்கள் என்ற பயம் அனைவரிடமும் பரவலாக தொற்றிக்கொண்டது.


1980 க்கு பிறகு படித்தவர்களின் எண்ணிக்கை கனிசமாக உயர்ந்ததின் காரணமாக யோகவின்மேல் இருந்த தவறான பயம் நீங்கி யோகம் ஒரு அறிவியல் கலையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்குப் பிறகும் யோகா சில ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இவைகளை பற்றி பின்னால் விரிவாக பார்ப்போம்


தொகுப்பு - மோகனா செல்வராஜ்