ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர பத்ரிக்கு விளக்கம், விளையாட்டாக சொன்ன பெரியவா.
நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம்
ஸ்ரீ மஹாபெரியவா சரணம் சரணம் சரணம்
ஸ்ரீமஹா பெரியவா சரணம் பெரியவா தரிசனம்
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
"நானே பத்ரி நாராயணன்"
பத்ரி நாராயணனை தரிசிக்க ஆசைப்பட்ட ஒரு மூதாட்டி.
ஒரு தடவை மரத்தடியில் அமர்ந்து, தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார் பெரியவா.ஒவ்வொருவராக தன் குறை, நிறைகளை அவரிடம் முறையிட்டு ஆறுதலடைந்தனர். வரிசையின் கடைசியில் ஒரு மூதாட்டி....பழுத்த பழம் என்பார்களே அந்த மாதிரி, மகானின் தரிசனத்திற்காக் வந்து கொண்டு இருந்தார்.அருகில் வந்ததும் வணங்கி எழுந்தார்.
"உனக்கென்ன வேண்டும் கேள்?" - அந்த மாது பரமபக்தை என்பதை மகான் அறிவார்.
"இனிமேல் எனக்கென்ன தேவை பிரபு? சதா சர்வ காலமும் உங்களை ஆராதித்துக் கொண்டு இருந்தாலே போதும்..."
"அதுதான் இருக்கே...குறையில்லாமே செய்றியே? இப்போது உனக்கு ஏதாவது ஆசை இருக்கா... இருந்தா சொல்..?"
பெரியவா இப்படிக் கேட்டதும் மூதாட்டி மௌனம் சாதித்தார் சில வினாடிகள்.
"சொல்....பரவாயில்லை...என்னால் முடிந்த அளவுக்கு உதவி பண்றேன்"-பெரியவா.
மூதாட்டியின் மௌனம் கலைந்தது.
"எனக்கு ஒரு ஆசை... இந்த உயிர் போறதுக்குள்ளே ஒரு தடவை 'பத்ரி நாராயணனை'ப் பார்க்கணும் "என்றார் தயங்கித் தயங்கி மெதுவான குரலில்.
பெரியவா பலமாகச் சிரித்தார்.
மூதாட்டிக்குப் புரியவில்லை.
"நீதான் எதிரிலேயே பார்த்துண்டு இருக்கறயே?---பெரியவா.
(எதிரில் பெரியவா அல்லவா இருக்கிறார்!)
"சந்தேகமா மேலே பாரு" என்றார் பெரியவா.
பின்னால் இருக்கும் மரம் இலந்தை மரமாக இருந்தது. இலந்தை மரத்திற்கு,'பத்ரி' மரம் என்று பெயர். அதன்கீழ் அமர்ந்திருப்பவர் பத்ரி நாராயணன் தானே?
மூதாட்டிக்கு அது புரிய நெடு நேரமாயிற்று.( இலந்தை மரத்தை 'பத்ரி' என்று சமஸ்கிருதத்தில் கூறுவார்கள் )
பத்ரிக்கு விளக்கம், விளையாட்டாக சொன்ன பெரியவா.
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.