சோனியா மீது எப்ஐஆர் பிரதமர் கேர்ஸ் நிதி குறித்து அவதூறு

பெங்களூரு: பிரதமர்-கேர்ஸ் நிதி குறித்து அவதூறு மற்றும் தவறான தகவல்களை வெளியிட்டதாக காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட காங்., தலைவர்கள் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.எந்தவொரு அவசர நிலை அல்லது துயர சூழ்நிலையையும் கையாள்வதற்கான நோக்கத்துடன் இந்திய அரசு 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்' (PM CARES Fund) என்ற பெயரில் நிதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், வர்த்தக மற்றும் தொழில் கூடங்கள், தனிநபர்கள், பிரபலங்கள் என பலரும் நிதியளித்து வருகின்றனர். இதற்கிடையே கடந்த மே 11ம் தேதி பிரதமர்-கேர்ஸ் நிதி குறித்து தவறான மற்றும் ஆதாரமற்ற தகவல்களை காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.கர்நாடகா மாநிலம் சிவமோகாவில் இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரில், காங்., தலைவர் சோனியா உட்பட சில காங்., தலைவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 505 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.