திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில்
பஞ்சரத தேரோட்டம்
இக்கோயிலில் சுமார் 180 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சரத் தேரோட்டம் 23 ஜனவரி 2016இல் நடைபெற்றது. விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வடிய முருகன், மகாலிங்கசுவாமி, தேவி, சண்டிகேஸ்வரர் இந்த ஐந்து தேர்களில் எழுந்தருளினர்.
பாவை விளக்கு
தஞ்சாவூரில் அரசுக்கட்டிலை இழந்த அமரசிம்மன் திருவிடைமருதூர் அரண்மனையில் தங்கி வாழ்ந்தார். அவரது மகன் பிரதாபசிம்மனை அவருடைய அம்மான் பெண்ணான அம்முனு அம்மணி விரும்பி, தன் திருமணம் நிறைவேற இக்கோயிலுக்கு லட்ச தீபம் ஏற்றுவதாக வேண்டிக்கொண்டாள். அவருடைய பிரார்த்தனை நிறைவேறிய பின்னர் இலட்சத் தீபம் ஏற்றி, அவற்றுள் ஒரு விளக்காக தன்னுடைய உருவத்தையே பாவை விளக்காக்கித் தன்னுடைய சிற்பமே தீபம் ஏந்தும் அளவு செய்தாள். 120 செ.மீ. உயரமுள்ள, பித்தளையால் ஆன இந்த பாவை விளக்கு அழகிய பீடத்தின் மீது உள்ளது. நின்ற நிலையில் அம்முனு அம்மணி தன் இரு கரங்களாலும் விளக்கினை ஏந்தியுள்ளார். அவருடைய தோளில் கிளி ஒன்று உள்ளது. இதன் பீடத்தில் அம்முனு அம்மணியின் காதல் காவியம் தமிழ்ப் பொறிப்புகளாக இடம் பெற்றுள்ளது. ஒரு மன்னரின் மனைவியே தீபம் ஏந்திய பாவை விளக்காக இன்றும் நிற்பது வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்வாகும்.
நூல்
திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில் என்ற நூலில் மருதவன வரலாறு, கோயில் செய்திகள், ஆண்டவிநாயகர், அகத்தியர் தரிசனம், தவக்கோலம், மகாலிங்கப்பெருமான், பிரணவப்பிரகாரம், ஆயர்பாடி கிருஷ்ணன், நட்சத்திரலிங்க வழிபாடு, பட்டினத்தார், பத்ரகிரியார், பிரம்மஹத்தி தோஷ பரிகாரம், கங்கையும் காருண்யாமிர்தமும், சக்ர மகாமேரு வழிபாடு, அசுவமேதப் பிரகாரம் உள்ளிட்ட பல தலைப்புகளில் திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளன.
நாளை தொடரும்
பக்தியுடன் மோகனா செல்வராஜ்