தை கிருத்திகை.... குறைகள் அனைத்தும் நீங்க...

 


தை கிருத்திகை.... குறைகள் அனைத்தும் நீங்க... முருகனை வழிபடுங்கள்...!!

🙏🙏🙏🙏🙏🙏🙏

தை கிருத்திகை விரத பலன்கள்...!!


🌟முருகனுக்கு உகந்த விரத நாட்களில் கிருத்திகை விரத சிறப்பினை பற்றி பார்க்கலாம் வாங்க..

🌟 கார்த்திகை பெண்கள் கந்தனைப் பாலூட்டி வளர்த்ததால் அவர்கள் தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். கார்த்திகை பெண்களின் தாய்மையை போற்றும் விதமாக கார்த்திகை பெண்களின் பெயரிலேயே முருகன், கார்த்திகேயன் என்று அழைக்கப்படுகிறார். அதுமட்டுமல்ல கார்த்திகை பெண்களின் நாளான கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டால் இன்னல்கள் அனைத்தும் நீங்கும். 

🌟 அவ்வாறே இன்றும் முருக பக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

🌟 அதிலும் ஒரு வருடத்தில் வரும் மூன்று கிருத்திகை தினங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தை மாதத்தில் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் ஆடி மாதத்தில் வரும் ஆடி கிருத்திகை என இந்த மூன்று கிருத்திகையும் முருகப்பெருமானுக்கு உகந்த நாட்கள்.

🌟 கிருத்திகையில் விரதம் இருந்து சேவல் கொடியோனை வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

புத்திர பாக்கியம் தரும் தை கிருத்திகை விரதம் :

🌟 தை கிருத்திகை இந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் கிருத்திகையில் விரதமிருந்து முருகப்பெருமானை வணங்கி வழிபாடு செய்தால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும், புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌟 சித்திரை முதலாகத் தொடங்கும் பன்னிரு மாதங்களில் பத்தாவது மாதமாக வருவது தை மாதம். பத்து மாதம் கருவுற்று, பிள்ளைச் செல்வம் பெற வேண்டிய பெண்மணிகள், பத்தாவது மாதமான தை கிருத்திகையில் முருகனை மனதார நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும், கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பது நம்பிக்கை.

🌟 "தை கிருத்திகையில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் குறைகள் அனைத்தும் தீரும். நினைத்தது நடக்கும்!" என்று சிவபெருமானே வாக்குறுதி அளித்ததாகவும் ஐதீகம்.

செவ்வாய் தோஷம் போக்கும் தை கிருத்திகை விரதம் :

🌟 செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மனை, சொத்து வழக்குகளில் பிரச்சனைகள், சகோதரர்களால் சங்கடங்கள், குரு திசை மற்றும் செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தை கிருத்திகை தினத்தில் விரதமிருந்து கந்தனை வணங்க அனைத்து கவலைகள், பிரச்சனைகள், தொல்லை, தொந்தரவுகள் நீங்கி வாழ்வில் சகல சௌபாக்கியங்களும் சேரும்.

🌟 அன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். மேலும் அன்று முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் மட்டும் அருந்தி விரதத்தை அனுஷ்டிக்கலாம்.


ஓம் சரவணபவ

மோகனா  செல்வராஜ்