அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது - நீதிமன்றம்

 


    அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது - நீதிமன்றம்


திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணி கண்காணிப்பாளராக பணியாற்றும் ராதிகா, தனக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.


மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்எம். சுப்ரமணியம், "மனுதாரர் பணியிடத்தில் உடன் புரிவோரை வீடியோ பதிவு செய்யக் கூடாது என பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ந்து இதே போல் செய்து வந்ததால் அவருக்கு சஸ்பெண்ட் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.


அரசு தரப்பில், மனுதாரர்கள் தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிவோர் இடம், முறையாக நடந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இந்த புகார் குறித்து விசாரிக்க விரும்பவில்லை . அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக மாறி வருகிறது. அலுவலக நேரங்களில் மொபைல் போன் பயன்படுத்துவதும், அதன்மூலம் வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது, ஏதேனும் அவசரம் எனில் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும். இவற்றை கருத்தில் கொண்டு,


1. அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாகவும், அலுவலக நேரத்தில் செல்போன் மூலமாக எடுக்கப்படும் வீடியோக்களால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழலில், அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும்.


2. தமிழக சுகாதாரத்துறை செயலர், அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பது தொடர்பாக விதிகள் உருவாக்க வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


3. இவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலர் நான்கு வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.


திருமதி மோகனா