வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள திருவருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வடலூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் திருஅருள்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. 

இந்தத் தெய்வ நிலையத்தில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். இதில், தை மாதத்தில் வரும் ஜோதி தரிசனம் மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். 

அதன்படி, 150-ஆவது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவுக்கான கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, அதிகாலை அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெற்றது. 

வடலூரில் வள்ளலார் ஜோதி தரிசனம்

இதைத் தொடர்ந்து, வடலூரில் உள்ள சத்திய தரும சாலையில் வள்ளலாரின் அகவலை பாராயணம் செய்தவாறு சன்மார்க்க கொடியை வள்ளலார் அன்பர்கள் ஏற்றினர். அப்போது, "அருள்பெருஞ்ஜோதி அருள்பெருஞ்ஜோதி... தனிப் பெருங்கருணை அருள்பெருஞ்ஜோதி...' என்று பக்தர்கள் பக்தி முழக்கம் எழுப்பினர்.

தொடர்ந்து, மருதூரில் உள்ள வள்ளலார் சன்னதி, நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதி, பார்வதிபுரத்தில் உள்ள ஞான சபை ஆகிய இடங்களில் அகவல் பாராயணம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக, அந்தந்தக் கிராமத்தினர் கொடியை ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, தரும சாலையில் சன்மார்க்க சொற்பொழிவு நடைபெற்றது. 

திருவருள்பிரகாச வள்ளலாா் தெய்வ நிலையம்​

ஜோதி தரிசனம்: வியாழக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனம் நடைபெற்றது. 

காலை 6 மணிக்கு ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 

தொடர்ந்து 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி ஆகிய நேரங்களிலும்,  வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி ஆகிய ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 

ஜன. 30 -ஆம் தேதி சித்திவளாக திருவறை தரிசன நிகழ்வு நடைபெறும். 

ஜோதி தரிசன விழாவை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.