விவசாயிகளின் மனதில் சூழ்ந்திருக்கும் சினத்திலிருந்து சிறிதளவேனும் தப்பிக்க வேண்டுமானால், உடனே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி என அறிவித்திட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 5-ஆம் தேதி மத்திய குழு சென்னை வந்தடைந்தது.
சென்னை,கடலூர்,வேலூர் ,புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு செய்தனர்.
நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க ரூ.74.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாக தமிழக அரசு அறிவித்தது.புயலால் சேதமடைந்த வீடுகள், சாலைகள், பாலங்கள், மின்கம்பங்களை உள்ளிட்டவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நவம்பர் இறுதி வாரத்தில் “நிவர்” புயல் மற்றும் கனமழையால், காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி – காவிரி டெல்டா விவசாயிகளின் வேளாண் பயிர்கள் கணக்கிட முடியாத அளவிற்கு சேதப்பட்டுள்ளன. மாநில பேரிடர் நிதியிலிருந்து 74 கோடி ரூபாயை விடுவித்து உத்தரவிட்ட அ.தி.மு.க. அரசு, அதை யாருக்குக் கொடுத்தது? என்ன செலவு செய்தது? என்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.
கடுமையான இழப்புக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கும் எந்த நிவாரண நிதியுதவியும் கிடைக்கவில்லை.இடைக்கால நிவாரணமாக நிவர் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
எனவே, தொடர்ந்து வஞ்சிக்கப்பட்ட விவசாயிகளின் மனதில் சூழ்ந்திருக்கும் சினத்திலிருந்து சிறிதளவேனும் தப்பிக்க வேண்டுமானால், உடனே ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி என அறிவித்திட வேண்டும்!