திருமண சடங்குகளும்,விளக்கமும் பற்றிய பகிர்வுகள்

 


நம்முடைய இந்து சமயத்தில் திருமண நிகழ்ச்சியின்போது செய்யப்படும் சடங்குகளுக்கு சுருக்கமாக விளக்கம் 

1. நாட்கால் நடல் :

இதை பந்தகால் நடுவது என்பார்கர்கள். பந்தகால் நடுவதற்கு வே ரில்லாமல் துளிரும் மரத்தை (பூவரசம் மரம்) வெட்டி நட வேண்டும். மரத்தின் நுனியில் , முனை முறியாத மஞ்சள், 12 மாவிலைகள், பூ மூன்றையும் இணைத்து கட்ட வேண்டும். 


பின்பு நட வேண்டிய குழி யில் வெள்ளி நாணயம் , பூ , நவ தானியம் இவற்றை போட்டு போட்டு பந்த கால் நட வேண்டும். சாம்பிராணி காண்பித்து தேங்காய் உடைக்க வேண்டும். 

பந்தகால் நட்டவுடன் மரத்தின் அடியில் பால் ஊற்றி, மஞ்சள், குங்குமத்தை மேல் நோக்கி தடவ வேண்டும். மாவிலை , நவதானியம் , வெள்ளி நாணயம் , பூ , தீய சக்திகளை உள்வாங்கிக் கொள்ளும்.  பிரபஞ்சத்தில் உள்ள பஞ்ச பூதங்களுக்கும் அறிவிக்கை செய்து ஆசி பெறுவது நோக்கமாகும்.

2. பொன்னுருக்குதல் :

திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும், போற்றி பாதுகாக்க படவேண்டியது ஆகும். நல்ல நாளில், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து உரிய நபரிடம் (பொற்கொல்லர் ) புதிய பொன் கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

3. கலப்பரப்பு :

மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை களத்தில் பரப்பி (தரையில் விரித்து) மணப் பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இரு வீட்டாருக்கும் வழங்குதன் மூலம் இரு வீட்டாரும் கலந்து ஒன்றாகிவிட்டதற்கான அடையாள நிகழ்ச்சி (கலம் என்பது பாத்திரம்) ஆகும். பாத்திரத்தில் மங்கலப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை , பாக்கு , தேங்காய் , பழக்கள் பூச்சரம்) நிரப்புதல் கலப்பரப்பு ஆகும் .

4. காப்பு கட்டுதல் :

காப்பு என்பது அரண் போன்றது . மங்களகரமான சக்தி வாய்ந்த

மங்கள உரு வாய்ந்த மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவது. திருஸ்டி மற்றும் அசுர சக்திகளால் இடையூறுகள் வராமல் தடுப்பதற்கு காப்புக் கட்டுவதில் இருந்து மறுநாள் காப்பு அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான  அனைத்து நிகழ்ச்சிகளையும் தடையின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும். அனைத்து நிகழ்ச்சிகளும் தடையின்றி நடைபெறும் வண்ணம் இடையூறு வராமல் காக்குமாறு தெய்வத்தை வேண்டிக் கட்டப்படுவது ஆகும்.

5. முளைப்பாலிகை :

நவதானியத்தின் மூலம் நவக்கிரகங்களை சாந்தி செய்வது. முளைப்பாலிகையில் இடப்படும் நவதானியங்கள் வளர்வதுபோல் குடும்பமும் செழித்து வளரட்டும் என்பதற்கான அடையாளச் சடங்கு . கள்ளங்கபடமற்ற குழந்தைகளின் உள்ளம் தெய்வீக பண்பின் உறைவிடம். எனவே சிறுமியர் மூலம் இச்சடங்கு நடத்தப்படுகின்றது.

6. தாரை வார்த்தல் :

தாரை என்றால் நீர் என பொருள் . நீருக்குத் தீட்டில்லை. நீர் மந்திர நாத ஒலியின் அதிர்வை ஏற்கக்கூடியது. இப்படி தெய்வத் தன்மை வாய்ந்த நீரை இதற்கு பயன்படுத்துகின்றனர். திருமணச்சடங்குகளில் மிகமுக்கியமானது தாரை வார்த்தல். தாரை வார்த்த பின்பு தான் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டும் உரிமையை அடைகின்றான்.

”என் மகளை தெய்வங்களின் சாட்சியாக உனக்கு மனைவியாக கொடுக்கின்றேன் “ என மணமகளின் பெற்றோர் , தாரை வார்த்து கொடுக்க மணமகனின் பெற்றோர் உங்கள் மகளை இனி எங்களது மறு – மகள் (மருமகள்) ஆக ஏற்றுக் கொள்கின்றோம் என்பதற்கான உறுதிமொழி . 

எனவே தான் மாப்பிள்ளையின் தாயார் கை ஏற்றுக்கொள்ளும் விதமாக அடியில் இருக்க , அதற்கு மேல் மணமகனின் தந்தையின் கை , மணமகனின் கை , மணப்பெண்ணின் கை , மணப்பெண்ணின் தந்தையின் கை , எல்லாவற்றிற்கும் மேலாக மணப்பெண்ணின் தாயாரின் கை. இந்த வரிசையில் கைகளை வைத்து இச்சடங்கு நடைபெறும்.  உரிமையை விட்டுக்கொடுப்பதற்கு அடையாளமாக செய்யப்படும் சாஸ்திரப்பூர்வமான சடங்கு தாரை வார்த்தல் எனப்படும்.

7. தாலி கட்டுவது :


தாலி என்பது மணமகன், மணமகள் கழுத்தில் கட்டும் மஞ்சள் கயிறு ஆகும். மஞ்சள் நிறம் இந்துக்களின் புனித நிறம் ஆகும். மேலும் தாலி என்பது ஒரு பெண்ணுக்கு அடையாள சின்னமாகும்.

 தலைநிமிர்ந்து நடந்து வரும் ஆடவர், ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது, கழுத்தில் தாலியை பார்க்கும் பொழுது இவள் மற்றவருக்கு உரியவள் என ஒதுங்கி போய்விடுவார்.

தாலம் பனை என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டைக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்த படியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள். 

பனை ஓலைத் தாலி அடிக்கடி பழுது

பட்டதால் நிரந்தரமாக இரு க்க உலோகத்தால் ஆன தாலி செய்து பயன்படுத்தினர். பின்னாளில் அதனைப் பொன்னால் செய்து பொற்றாலி ஆக்கினர்.

ஆயின் தாலியின் உண்மையான அடையாளம் பொன்னில் செய்வதால் அல்ல. வெறுமே ஒரு விரலி மஞ்சளை எடுத்துக் கயிற்றால் கட்டி கழுத்தில் முடிச்சுப் போடுவது கூடத் தாலி தான்.

 (இயல் மஞ்சளை எடுத்து, வெய்யிலில் காயவைத்து, நீரில்லாமல் வற்றவைத்த மஞ்சளுக்குத் தான் விரலி மஞ்சள் என்று பெயர். விரல் விரலாய் இருக்கும் மஞ்சள் விரலி மஞ்சள். மஞ்சள் கட்டும் கயிற்றுக்கும் மஞ்சள் நிறம் ஏற்றுவார்கள்.) தாலியின்  “மஞ்சள் கயிறு கட்டுதல்” ஆகியவற்றில் அடங்கி இருக்கிறதே ஒழிய பொன், பணம், சங்கிலி என்பதில் இல்லை.

இன்னார் மகன், இன்னார் மகளை இன்னார் சம்மதத்துடன் இன்னார் முன்னிலையில் இந்த நேரத்தில் இந்நாளில் கல்யாணம் செய்து கொள்வதாக அனைவரும் கையொப்பமிட அந்த தாலியினை கயிற்றில் கோர்த்து மணமகளின் கழுத்தில் மணமகன் கட்டியதாக சாஸ்திரம் கூறுகிறது. 

தாலி என்பது ஆரியர்களுக்கு பிறகு வந்த பழக்கம் என சிலர் கூறுவர்.ஆனால் அது தவறாகும். பண்டைய காலத்திலேயிருந்து தமிழர்கள் பின்பற்றிவந்த ஒரு சம்பிரதாயமாகும்.

பண்டைய இலக்கியங்களில் இதை மங்கள நாண் என் று கூறப்பட்டுள்ளது.

மாங்கல்ய சரடானது ஒன்பது இழைகளை கொண்டதாகும். ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குனங்களை குறிக்கிறது.

தெய்வீககுணம், தூய்மையான குணம், மேன்மை, தொண்டுள்ளம், தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை உள்ளபடி புரிந்துகொள்ளுதல் போன்ற ஒன்பது குணங்களும் ஒரு பெண்ணிற்கு இருக்கவேண்டும் என்பதற்காகவே, ஒன்பது சரடு உள்ள மாங்கல்ய நாண் பெண்களுக்கு அணியபடுகிறது.

8. ஹோமம் வளர்த்தல் :

வேதங்களில் சொல்லப்பட்டப்படி அக்னி சாட்சியாக திருமணம் நடைபெற வேண்டும். ஹோமத்தின் மூலம் நவக்கிரகங்களைத் திருப்தி படுத்த வேண்டும். ஹோமத்தில் இடப்படும் பொருட்கள் சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்துகிறது. ஹோமப்புகை உடலுக்கு ம், மனதுக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எந்த ஒரு நிகழ்வும் அக்னி சாட்சியாக நடந்தால் தான் சாஸ்திரப்படி சரியாகும் .

9. கும்பம் வைத்தல் :

கும்பம் இறைவனது திரு உடம்பின் அடையாளம். இறைவனின் வித்யா தேகமாகத் திகழ்வது கும்பம். இறைவனது திருமேனி , கும்பத்தில் பாவிக்கப்படும்.

கும்பவஸ்திரம்——- உடம்பின் தோல்

நூல்———————— நாட நரம்புகள்

குடம் —————————— தசை

தண்ணீர் ————————– இரத்தம்

நவரத்தனங்கள் —————— எலும்பு

தேங்காய் ————————- தலை

மாவிலை ——————– தலைமயிர்

தருப்பை ————————- குடுமி

மந்திரம் ————————– உயிர்

ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது.

10. அம்மி மிதித்தல் :


அம்மி என்பது கருங்கல்லினால் ஆன சமையல் செயவதற்கு பயன்படும், பொருட்களை அரைப்பதற்கு பயன்படும் கருவியாகும். அம்மி மிக உறுதியுடனும், ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும். 

திருமண பெண் புகுந்த வீட்டில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், கணவர், மாமானார், மாமியார், நாத்தானார் மற்றும் அனைவராலும் சங்கடங்கள் வந்தாலும், மன உறுதியுடன் எதையும் எதிர்கொள்ளும் பக்குவத்தை கொண்டிருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே அம்மி மிதிப்பது ஆகும்.

11. அருந்ததி பார்த்தல் :

அருந்ததி என்பது ஏழு ரிஷிகளில் ஒருவரான வசிஷ்டர் அவர்களின் மனைவியாவார். ஏழு ரிஷிகளும், வானில் நட்சத்திரங்களாக ஒளி வீசுகிறார்கள். இதைத் தான் நாம் துருவ நட்சத்திரம் என்கிறோம். ஏழு நட்சத்திரங்களில், ஆறாவதாக (நட்சத்திரம்) இருப்பவர் வசிஷ்டர் ஆவார். இவருடைய மனைவி அருந்ததி ஆவார்.

இரவு நேரத்தில் வடக்கு வானில் நாம் பார்த்தோம் என்றால், சப்த ரிஷி மண்டலத்தை காணலாம். 

வசிஷ்டரும், மனைவியும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களின் மீது எந்த சபலம் இல்லாமல் வாழ்ந்தவர்கள். அருந்ததி நட்சத்திரம் அருகிலேயே இருந்தாலும், நம் கண்களுக்கு ஒரே நட்சத்திரமாக தெரிகிறது.

அதேபோல் மணமக்கள் இருவராக இருந்தாலும், எண்ணங்களும், சிந்தனைகளும் ஒன்றாக இருக்கவேண்டும். மணமகளும் அருந்ததியை போல் கண்ணியமாகவும், கட்டுபாட்டுடன் வாழ வேண்டும் என்பதை உணர்வதற்காக அருந்ததி பார்க்க சொல்கிறார்கள்.

12. ஏற்றி இறக்குதல் :

மணமக்களை பாதுகக்க இரு சுமங்கலிகள் மங்கலப் பொருட்களை (திருவிளக்கு , நிறைநாழி , சந்தனக்கும்பம், பன்னீர்ச் செம்பு , தேங்காய் , பழம் , குங்குமச்சிமிழ் , மஞ்சள் பிள்ளையார் போன்றவை) தொட்டுச் செய்யும் சடங்கு. மேலும் அருவ நிலையிலிருந்து மணமக்களை ஆசிர்வதிக்கும் தெய்வங்களுக்கும் பஞ்ச பூதங்களுக்கும் , முன்னோர்களுக்கும் காட்டும் மரியாதையான பாவனை, திருஸ்டி கழிப்பதற்காக செய்யப்படுவதும் உண்டு.

13. அடை பொரி :

பச்சரிசி மாவினால் செய்யப்படும் அடையும் பல உருவத்தைக் கட்டும் வகையில் பொரிக்கப்படும் நெல் பொரியும் , திருமண நிகழ்வுகளால் ஏற்படும் பல்வேறு திருஸ்டி தோஸங்களை நீக்க வல்லது. இது அட்டத்திக்கு பாலகர்களுக்கு கொடுக்கப்படும் அவிர் பாகம் ஆகும்.

14. நிறை நாழி :

நித்தமும் குத்து விளக்கு என்று சொல்லக்கூடிய திருவிளக்கருகே வைத்து வழிபட்டால் நற்பேறுகள் பெருகும் என்பது ஐதீகம் ஆகும்.

15. ஒலுசை :

ஒலுசை என்பதை வரதட்சணை என்றும் கூறுவர். மணமகள் அனைத்து வகைச் செல்வங்களுடன் கணவன் வீட்டிற்கு வருகிறாள் என்பதை அறிவிக்கும் நிகழ்ச்சி. 

சிறப்பான இல்லற வாழ்விற்கு அத்தியாவசியமான பொருட்களை பொறுப்புணர்ச்சியுடன் பெண் வீட்டார் கொடுப்பது. ஒலுசைப் பொருட்களைப் பட்டியலிட்டு சபையில் கொடுப்பது தற்சமயம் குறைந் து வருகிறது . இது வரவேற்க்க தக்க விசயமாகும்.

16. மணமகள் பொங்கலிடுதல் :

முதல் நாள் திருமண நிகழ்ச்சிகள் அனைத்தையும் சிறப்பாக நடத்திக் கொடுத்த இறைவனுக் கும் , முன்னோர்களுக்கும் சூரியன் முதலான் தேவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி ஆகும். 

மணமகள் வீட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள் என்பதைக் வெளிப்படுத்துவது. புதுப்பெண்ணின் சமையல் நளினம் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள உதவுவது.

 இதுதான் மணப்பெண்ணின் முதல் சமையல். இன்று போல் என்றும் வாழ்க்கை பால்போல் பொங்கவேண்டும் என்பதற்கான அறிகுறியே பொங்கலிடுவதின் நோக்கமாகும்.

17. பிள்ளை மாற்றுவது :

திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு ”மங்கலமென்ப மனைமாட்சி மற்று அதன் நஙலம் நன்மக்கட்பேறு “ – திருவள்ளுவரின் வாக்காகும்.  நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு .

பிறக்கப் போகும் குழ்ந்தைகள் நல்ல முறையில் சிறப்பாக இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அனைவரும் ஒரு சேர வாழ்த்துவது. 

திருமணத்தின் பயனே நன்மக்கட்பேறு ”மங்கலமென்ப மனைமாட்சி மற்று அதன் நஙலம் நன்மக்கட்பேறு “ – திருவள்ளுவரின் வாக்காகும்.  நன்மக்கட்பேறு பெறுவதற்காக செய்யப்படும் ஒரு சடங்கு .

18. மறுவீடு :

மணமகளின் பெற்றோரும் – உறவினரும் மாப்பிள்ளை வீட்டிற்கு முதன்முறையாக மணமகளுடன் சென்று – விருந்துண்டு மகிழ்ந்து – உறவை வலுப்படுத்துவது.

ஒரு பெண்ணிற்கு பிறந்தவீடு வாழ்க்கையும் , புகுந்த வீடு வாழ்க்கையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. மகளை வாழ்க்கையின் மறுபக்கத்தை காணச் செய்வதே – ம்றுவீடு ஆகும்.

19. கோவிலுக்கு அழைத்துச் செல்லல் :

நல்ல திருமண வாழ்க்கை வேண்டும் என்பது மணமக்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக அமைந்திருக்கும். வேண்டுதலை நிறைவேற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்துவதுடன் , இல்லற வாழ்க்கை வளம் பெற தெய்வங்களின் ஆசி பெறுவதற்கு தம்பதிகளைக் கோவிலுக்கு அழைதுச் செல்ல வேண்டும்.

பகிர்வு : மோகனா  செல்வராஜ் 

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை  செய்திகள்  ஆன்மீக பயணம் தொடரும்.