கோவிந்தராஜ பெருமாள் சயன கோல தத்துவம்-திருமயம் - போக சயனம்

மனிதர்களாக பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் 274 தேவாரப் பாடல் பெற்ற தலங்களையும் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைஷ்ணவ திவ்ய தேசங்களையும் அவசியம் தரிசிக்கவேண்டும்.


மேலும் இனி பிறவி வேண்டாம் போதும் என்று கருதினால் அதை நிறுத்திக்கொள்ளக் கூடக்கூடிய வாய்ப்பும் மனிதப் பிறவிக்கு மட்டுமே சாத்தியம்.


மற்ற பிறவிகளில் அது சாத்தியமில்லை. காரணம் மனிதப் பிறவிக்கு உள்ள பல்வேறு தனித்தன்மைகளில் ஒன்றான ‘இறைபக்தி’.


வயதாகி முதுமை வந்தால் தான் இது போல திருத்தலங்களை தரிசிக்க வேண்டும் என்கிற கருத்து பலரிடம் உள்ளது.


அது தவறு. தவறு. தவறுக்கும் தவறான தவறு. இந்த சரீரம் நன்றாக இயங்கிக்கொண்டிருக்கும்போதே புண்ணிய ஷேத்ரங்களையும் திருத்தலங்களையும் தரிசித்துவிடவேண்டும்.



ஸ்ரீரங்கம் - வீர சயனம்
மகாபலிபுரம் - தல சயனம்
திருமயம் - போக சயனம்
திருக்கோஷ்டியூர் - பால சயனம்
கும்பகோணம் - உத்தான சயனம்
திருவனந்தபுரம் - அனந்த சயனம்
திருமோகூர் - பிரார்த்தனா சயனம்
திருப்புல்லாணி - தர்ப்ப சயனம்
திருச்சித்திரக்கூடம் - போக சயனம்
திருநீர்மலை - மாணிக்க சயனம்
ஸ்ரீவில்லிபுத்தூர் - வடபத்திர சயனம்


திருமயம் என்ற திருமெய்யம், பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் முத்தரையர்களால் கட்டபட்ட குடைவரைக் கோவில்.


ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும்.


அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இத்தலத்தில் சத்திய மூர்த்தி, திருமெய்யர் என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன.


திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.


இது ஒரு முத்தரையர் காலத்திய குடைவரைக் கோவிலாகும்.


திருமயம் மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த அதிசயிக்கத்தக்க குடைவரைக் கோவிலில் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன. வேலைப்பாடமைந்த கற்றளியான சத்தியமூர்த்தி கோயில் அவற்றுள் ஒன்று. இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது.


எனவே இந்த சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும்.


ஆதிரங்கம்


சதுர் யுகம் என்பது ஒரு யுகம் முடிந்து மறு யுகம் பிறக்கும் காலச் சக்கரத்தைக் குறிக்கும் அளவு. இந்த அளவின் படி திருவரங்கத்து பெருமாள் 64 சதுர் யுகங்களுக்கு முன்னால் தோன்றினார்.


ஆனால் திருமெய்யம் சத்யகிரிநாதன் (அழகிய மெய்யன்) 96 சதுர் யுகங்களுக்கு முன்னரே தோன்றியவராதலால், திருமெய்யம் திருத்தலம் ஆதிரங்கம் என வழிபடப்படுகிறது.


மூலவர் சத்தியமூர்த்தி



இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.


தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு என்றும் சத்தியமாகத் துணை நிற்பேன் என்று இத்தல இறைவன் வாக்குறுதி தந்ததால் இவருக்கு ’சத்தியமூர்த்தி’ என்ற திருப்பெயர் வந்தது.


தல வரலாறு


பெருமாள் அரவணையில் படுத்து யோக நித்திரையில் ஆழ்ந்திருந்த சமயம், மது மற்றும் கைடபர் என்ற இரு அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய தேவியரை அபகரிக்க முயன்றனர். இதற்கு அஞ்சிய தேவியர் இருவரும் ஒளிந்து கொள்ளலாயினர். பெருமாளின் திருவடிக்கருகில் பூதேவியும், மார்பில் ஸ்ரீதேவியும் தஞ்சமடைந்தனர். பெருமாளின் நித்திரை கலைந்துவிடுமே என்ற கவலையில் அவரை எழுப்பாமல் ஆதிசேஷன் என்ற ஐந்து தலை நாகம் தன் வாய் மூலம் விஷத் தீயை கக்கினார்.


பயந்து நடுங்கிய அரக்கர்கள் ஒடி ஒளிந்தனர். கண்விழித்த பெருமாளிடம் தன் செய்கை பெருமாளுக்கு சினத்தை ஏற்படுத்திவிடுமோ என்று பயந்து அஞ்சியவாறு இருந்த ஆதிசேஷனை, பெருமாள் தான் துயில்கையில் அரக்கர்கள் செய்த வனகொடுமையினைத் தடுக்க எடுத்த வீரச்செயல்களை மெச்சிப் புகழ்ந்தார்.


புராண வரலாறு



  • திருமெய்யம் திருக்கோயிலின் பெருமை பிரம்மாண்ட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளது.

  • சிவபெருமானே நாரதருக்கு இத்திருத்தலப் பெருமைகளைக் கூறியதாகவும், சத்திய தேவதையும் தர்மதேவதையும் கலியுகத்தில் இங்கு வந்து வழிபடுவர்களுக்கு கவலை இல்லா மனத்தையும் நீண்ட ஆயுளையும் அளிப்பதாகவும் புராண வரலாறு கூறுகிறது.


திருமெய்யம் குன்றினுடைய செங்குத்தான தெற்கு நோக்கிய சரிவில் திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் அறுபதடி தூரத்தில் அடுத்தடுத்து இரு திருக்கோயில்களும் அமைந்துள்ளன.


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமெய்யம் திருமாலையும் , சிவபெருமானையும் ஒரே வாயிலின் வழியாகச் சென்று தரிசிக்கும் வண்ணம் இத்திருக்கோயில்கள் அமைக்கப்பட்டு சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக உள்ளன


குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள் நலம் பெற தாயாரிடம் வேண்டுதல்கள்.


தசாவதார மண்டபத்தில் உள்ள தூண்களில் உள்ள சிற்பங்கள் சிறப்பானவை. தூண்களில் உள்ள தசாவதார திருக்கோலங்கள் மற்றும் துவஜஸ்தம்பத்திற்கு அருகில் உள்ள தூணில் உள்ள ராமாவதாரம் மற்றும் வாமன அவதாரம் சிற்பங்கள் அழகு வாய்ந்தவை. 


காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை  


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


ஓம் நமசிவாய 


ஓம் நமோ நாராயணணாய 


பக்தியுடன் மோகனா  செல்வராஜ்