இனப்பெருக்கத்திற்காக ஜெர்மன் நாட்டு காளை மாடுகள் சென்னை வரவழைப்பு

 



சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்ககப்பிரிவு முனையத்திற்கு ஜெர்மனியில் இருந்து கத்தார் தலைநகர் தோகா வழியாக சரக்கு விமானம் வந்தது. இந்த விமானத்தில் இனப்பெருக்கத்திற்காக 105 ஜெர்மன் நாட்டை சேர்ந்த காளை மாடுகள் கொண்டு வரப்பட்டன.


இந்த காளை மாடுகள் இனப்பெருக்கம் செய்வதற்காக தேசிய பால் மேம்பாட்டு வாரியம் சார்பில் வரவழைக்கப்பட்டு உள்ளது.


இதற்காக விமானம் மூலம் ஒவ்வொரு மரப்பெட்டியிலும் 2 முதல் 3 காளை மாடுகள் அடைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டன. இந்த மரப்பெட்டிகள் காளை மாடுகளின் எடைகளை தாங்கும் வண்ணம் 250 கிலோவில் இருந்து 300 கிலோ எடை கொண்டதாக இருந்தன.


இதையடுத்து வந்திறங்கிய காளை மாடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. சுமார் 3 மணி நேரத்தில் சோதனைகள் முடித்து அவை அனுப்பப்பட்டன.


இந்த காளைகள் சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்திற்கு சொந்தமான பால் பண்ணையில் சில காலம் தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அவை இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தப்படவுள்ளன.