முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்தனர்


 


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திலுள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், தேவர் ஜெயந்தி குருபூஜை விழா 30.10.2020 கொண்டாடப்படுகிறது.


இந்த விழாவில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக தலைவர் முக.ஸ்டாலினும் நேற்று ஒரே விமானத்தில் மதுரைக்கு பயணித்தனர்.


விமானத்தின் முதல் வரிசையில் இடதுபுறம் ஜன்னல் பக்க இருக்கையில் முதலமைச்சர் பழனிசாமியும், வலது புறம் ஜன்னல் பக்க இருக்கையில் மு.க.ஸ்டாலினும் அமர்ந்தனர்.


ஸ்டாலின் உடன் பூங்கோதை, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோரும், முதல்வர் பழனிசாமி உடன், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோரும் பயணித்தனர்.


அரசியலில் இருவரும் இரண்டுதுருவங்களாக இருந்தாலும், இந்த பயணத்தில் இருவரும் ஏதாவது பேசிக் கொள்வார்களா என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்துக்கூட பேசிக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.


கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால், பயணித்த அனைவருமே முகக்கவசம், ஷீல்ட் அணிந்திருந்ததால், பார்த்து பேச வாய்ப்பிருந்திருக்காது.


விமானம் மதுரையை அடைந்ததும், முதலில் முதலமைச்சர் வெளியே சென்றுள்ளார். பின்னர் ஸ்டாலின் கிளாம்பியுள்ளார். விமான நிலையத்தின் வெளியே அதிமுக தொண்டர்களும், திமுக தொண்டர்களும் தங்கள் தலைவர்களை உற்சாகமாக வரவேற்றனர். இந்த சம்பவத்தின் மூலம் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவரும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்தனர் என்ற வரலாற்று சம்பவம் மட்டும் நிகழ்ந்துள்ளது.