இலங்கை தமிழர் பிரச்சனையை கையில் எடுக்கும் பா.ஜ.க


தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.





இந்நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து, தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு கிடுக்கிப்பிடி போட, பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தயாராகி வருகிறது.


மோடி பிரதமர் பதவியில் அமர்ந்த பின், முதலில் இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்திற்கு சென்றார்.


பிரதமரின் இந்த பயணம், அங்கு தமிழ் பள்ளிகளில், தமிழ் மாணவர்களுடன் மோடி பேசுவது ஆகிய, "வீடியோ"க்களை, பா.ஜ.க மேலிடம் தயார் செய்துள்ளது.


மேலும், தமிழக மீனவர்களின் நலனுக்காக, இலங்கையுடன், பா.ஜ.க அரசு செயல்படுத்திய திட்டங்களும், அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


ஒரு நிமிடம் ஓடக் கூடிய இந்த வீடியோவை பார்த்து, பிரதமர், சம்மதித்துள்ளதாகவும்  தேர்தலுக்கு முன், இந்த வீடியோக்கள் வெளியாக உள்ளன.


இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது, மத்தியில், காங்கிரஸ் கூட்டணி அரசில், தி.மு.க., அங்கம் வகித்தது.


வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த வீடியோக்களை வெளியிட, பா.ஜ.க முடிவு செய்துள்ளது என்று  தகவல்கள் தெரிவிக்கின்றனர்.