கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நீதிமன்றத்தில் வழக்கிற்காக ஆஜராக வரும் வக்கீல்கள் கருப்பு கோட்டு, கவுன் அணிந்து வர வேண்டாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 25 முதல் சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் மட்டும் விசாரணை நடந்தது. இந்நிலையில், செப்டம்பர் 7ம் தேதி முதல் உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் ஆஜராகலாம் என்றும் வழக்கு விசாரணை உள்ள வக்கீல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வக்கீல்கள் கருப்பு கோட்டு, கருப்பு கவுன் அணிந்து ஆஜராக தேவையில்லை. வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் அணிந்து கழுத்தில் நெக் பேண்ட் அணிந்தால் மட்டும் போதுமானது என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.