ருணம், ரணம் போக்கும் செவ்வாய்கிழமை பிரதோஷம் - சிவ தரிசனம் கோடி புண்ணியம்
பொதுவாக பிரதோஷ காலம் சிவ வழிபாட்டுக்கு உரியது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் வரும் திரயோதசி திதி வரும் மாலையே பிரதோஷ தினமாகக் கருதப்படுகிறது.
வளர்பிறை பிரதோஷத்தின்போது தேவர்களும் தேய்பிறை பிரதோஷத்தின்போது மனிதர்களும் கட்டாயம் சிவனை வழிபட வேண்டும் என்பது ஐதிகம்.
பிரதோஷ வேளையில் தேவர்களும் மூவர்களும் சிவ சந்நிதியில் இருப்பார்கள். பிரதோஷ காலத்தில்தான் இறைவன் ஆனந்தக் கூத்தாடி தேவர்களைக் காத்தார். துன்பங்கள் சூழும் வேளையில் இறைவனின் திருவடியே காப்பு என்பதே இதன் தாத்பர்யம். எனவே, இந்த நாளில் பிரதோஷ வேளையில் சிவதரிசனம் செய்ய வேண்டியது அவசியம்.
எப்போதும் சிவ தியானத்திலேயே நிலைத்திருப்பவர் நந்திதேவர். ஆனால், பிரதோஷ வேளையில் மட்டும் தியானம் கலைந்து சிவ பக்தர்களை வரவேற்கக் காத்திருப்பார் என்று சொல்கின்றன.
சாஸ்திரங்கள். அதனால்தான் பிரதோஷ வேளையில் சிவனோடு சேர்ந்து நந்திக்கும் விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மேலும், நந்திபகவானிடம் வைக்கும் வேண்டுதல்கள் அனைத்தையும் நிறைவேற்றும்படி அவர் சிவபெருமானிடம் வேண்டுதல் செய்வார்.
ருணம் என்றால் கடன் ஆகும். வாழ்வில் கடன் சுமையில் மீளமுடியா நிலையில் உழன்று கொண்டிருப்பவர்கள், வருமானத்திற்கு மீறிய கடன் சுமை உள்ளவர்கள் செவ்வாய் கிழமைகளில் வரும் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டபடியே முயற்சியை மேற்கொண்டால் இறைவனும் நம்முடன் கலந்துகொண்டு கடன் தீரும் வகையில் நம்மை வழி நடத்துவார்.
ஓம் சிவாய நம ஓம் சிவ சிவ ஓம்
அன்பே சிவம் - சிவமே அன்பு திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.
நன்றி.
பக்தியுடன் மோகனா செல்வராஜ்